ஜனவரி 1 முதல் டொயோட்டா கார்களின் விலையும் உயர்கிறது!
வரும் 1ந் தேதி முதல் டொயோட்டா கார்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை அந்த நிறுவனம் இன்று வெளியிட்டிருக்கிறது.
ரூபாய் மதிப்பு மற்றும் உற்பத்தி செலவீனத்தை காரணமாக கூறி, மாருதி உள்ளிட்ட பெரும்பாலான கார் நிறுவனங்கள் ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன.

இந்த நிலையில், நீண்ட யோசனைக்கு பின் டொயோட்டா நிறுவனமும் இந்த வரிசையில் கார் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. பண பரிமாற்றம் மற்றும் உற்பத்தி செலவீனம் அதிகரித்துள்ளதையடுத்து, விலை உயர்வு நடவடிக்கையை எடுக்க வேண்டியதாயிற்று என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு விலை உயர்வு இருக்கும் என்பது குறித்து இப்போது தகவல் எதையும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. அதேநேரத்தில், கார்களுக்கான சிறப்பு சேமிப்புச் சலுகைகளை நாளை வரை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து டொயோட்டா லிவா, எட்டியோஸ், இன்னோவா, கரொல்லா ஆல்டிஸ், கேம்ரி, ஃபார்ச்சூனர் லேண்ட்க்ரூஸர் மற்றும் பிராடோ ஆகிய அனைத்து டொயோட்டா கார் மாடல்களின் விலையும் உயர்கிறது. புத்தாண்டில் புதிய டொயோட்டா கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது கூடுதல் சுமையையும் ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications








