ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் டொயோட்டா மிராய்க்கு போட்டா போட்டி முன்பதிவு!
ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாக கொண்டு இயங்கும் டொயோட்டா மிராய் காருக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. உற்பத்தி இலக்கை வைக்கப்பட்டதை தாண்டி இருமடங்கு கூடுதல் முன்பதிவை இந்த கார் பெற்றிருக்கிறது. இது ஆட்டோமொபைல் உலகில் ஓர் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாடலாக பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் ஜப்பானில் வணிக ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய கார் வரும் மார்ச் மாதம் முதல் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த காரை பற்றிய விசேஷ தகவல்களை ஸ்லைடரில் தெரிந்துகொள்ளலாம்.

சுற்றுச்சூழல் நண்பன்
மிராய் என்றால் ஜப்பானிய மொழியில் 'எதிர்காலம்' என்று பொருள். ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் இந்த காரிலிருந்து புகை வெளிவராது என்பதால் சுற்றுச்சூழலுக்கு பெரிதும் உவந்த கார் மாடலாக கூறலாம். எனவே, வாகன புகையால் மூச்சுத் திணறும் நகர்ப்புறங்களுக்கு இந்த கார் வரப்பிரசாதமாக அமையும்.

எரிபொருள்
எலக்ட்ரிக் கார்கள் போன்று பல மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டியதில்லை. பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்புவது போன்றே ஒரு சில நிமிடங்களில் இதில் எரிபொருள் நிரப்பிவிட முடியும்.

மைலேஜ்
ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 650 கிமீ தூரம் பயணிக்க முடியும். 4 பேர் அமர்ந்து செல்லும் மிட்சைஸ் செடான் காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

வணிக ரீதியில் விற்பனை
ஜப்பானில் 57,000 அமெரிக்க டாலர் மதிப்பிலும், ஜெர்மனியில் 75,140 டாலர் விலை மதிப்பிலும், அமெரிக்காவில் 57,500 டாலர் விலை மதிப்பிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காருக்கு ஜப்பான் அரசு 19,600 டாலர் வரிச்சலுகை அறிவித்துள்ளது. செப்டம்பர் முதல் ஜெர்மனி, இங்கிலாந்து, டென்மார்க் நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. 2017ம் ஆண்டு முதல் இதர நாடுகளில் விற்பனைக்கு வருகிறது.

அமோக வரவேற்பு
உற்பத்தி துவங்கி முதல் ஆண்டில் 700 மிராய் கார்களை தயாரிக்க டொயோட்டா இலக்கு வைத்துள்ளது. ஆனால், 1500 கார்களுக்கு முன்பதிவு கிடைத்துள்ளதாக டொயோட்டா பெருமிதம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








