ஆர்டர் குவிகிறது... புதிய மிராய் ஹைட்ரஜன் கார் உற்பத்தியை அதிகரிக்கும் டொயோட்டா!
உலகின் முதல் தயாரிப்பு நிலை ஹைட்ரஜன் கார் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கும் டொயோட்டா மிராய் காருக்கு ஆர்டர் குவிகிறது. இதையடுத்து, அந்த காருக்கான உற்பத்தி இலக்கை வெகுவாக அதிகரிக்க டொயோட்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஹைட்ரஜன் வாயு எரிபொருளில் இயங்கும் டொயோட்டா மிராய் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 400 மிராய் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டிருப்பதாக டொயோட்டா அறிவித்தது.

இந்த நிலையில், ஜப்பானில் மட்டுமே 1500 மிராய் கார்களுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 60 சதவீதம் அளவுக்கு அரசு மற்றும் டாக்ஸி ஆபரேட்டர்களிடமிருந்தும், 40 சதவீதம் தனிநபர்களிடமிருந்தும் முன்பதிவு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜப்பான் மட்டுமின்றி, இங்கிலாந்து மற்றும் இதர வெளிநாடுகளிலும் இந்த கார் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. இதனால், காத்திருப்பு காலம் வெகுவாக அதிகரிக்கும் என்பதை கருதி, இந்த ஆண்டு 700 மிராய் கார்களையும், அடுத்த ஆண்டு 2,000 மிராய் கார்களையும், 2017ம் ஆண்டு 3,000 கார்களையும் உற்பத்தி செய்ய டொயோட்டா முடிவு செய்துள்ளது.
ஜப்பான் பிரதமர் மற்றும் அந்நாட்டு அரசு உயரதிகாரிகள் சிலருக்கு ஹைட்ரஜனில் இயங்கும் டொயோட்டா மிராய் கார் சமீபத்தில் பரிசாக வழங்கப்பட்டது. அவற்றை, அதிகாரப்பூர்வ காராக அவர்கள் பயன்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








