ஃபோக்ஸ்வேகன் டிகுவான் இந்தியாவிலேயே அசெம்பிள்... போட்டியாளர்களுக்கு நெருக்கடி!
இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வருவது உறுதி செய்யப்பட்டது குறித்து டிரைவ்ஸ்பார்க் தளத்தில் இரு மாதங்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகனிடம் இருந்து அடுத்த ஒரு நல்ல செய்தி கசிந்துள்ளது.
அதாவது, போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில், டிகுவான் எஸ்யூவியை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டிருப்பதுதான் அந்த தகவல். இது போட்டியாளர்களுக்கு நெருக்கடியாக அமையும் என கருதப்படுகிறது.

புதிய தலைமுறை மாடல்
அடுத்த மாதம் பிராங்க்பர்ட் நகரில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்த மாடல்தான் இந்தியாவிற்கும் வர இருக்கிறது.

பிளாட்ஃபார்ம்
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்.க்யூ.பி., பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இரண்டாம் தலைமுறை டிகுவான் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய தலைமுறை போலோ, பஸாத் மற்றும் ஸ்கோடா கார்கள் இந்த புதிய பிளாட்ஃபார்மிலிருந்துதான் வடிவமைக்கப்படுகின்றன.

எஞ்சின் விபரம்
இந்தியாவில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எஞ்சின் சர்வதேச மார்க்கெட்டில் 150பிஎஸ், 190பிஎஸ் மற்றும் 240 பிஎஸ் என மூன்றுவிதமான பவரை அளிக்கும் மாடல்களில் வருகிறது. இதில், ஒரேயொரு ஆப்ஷன் மட்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியர்பாக்ஸ்
இந்த எஸ்யூவி 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷன்களில் வெளியிடப்படும். அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் பவரை அனுப்பும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனிலும் வருகிறது. இந்தியாவில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலில் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

இருக்கை அமைப்பு
தற்போதைய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி 5 சீட்டர் மாடல். ஆனால், புதிய தலைமுறை மாடல் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வர இருக்கிறது.

அறிமுகம் எப்போது?
அடுத்த மாதம் பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோ மூலம் சர்வதேச பயணத்திற்கு தயாராகிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்தியர்களுக்கு தரிசனம் தரும். அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவாலான விலை?
ரூ.30 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும்பட்சத்தில், ஒன்றிரண்டு லட்சங்கள் விலை குறையும். இதன்மூலம், டொயோட்டா ஃபார்ச்சூனர், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவிகளுக்கு சமமான விலை பட்டியலிலேயே விற்பனைக்கு வரும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








