காற்றை களங்கமாக்கும் வாகனங்கள்... புகையைக் கக்கும் 2.8 கோடி பழைய வாகனங்களை ஒழிக்க முடிவு...
எட்டுத் திசை தோறும் தொழில்நுட்ப வளர்ச்சி எட்டி விண்ணைத் தொடும் அளவு உயர்ந்து வருகிறது. ஜப்பான், சீனா, அமெரிக்கா அப்படி, இப்படினு சும்மா சீன் போடாதீங்கப்பா... எங்க இந்தியாவிலும்தான் புல்லட் ரயில் வரப்போகுது. ராமேஸ்வரத்துல இருந்து ஸ்ரீலங்கா போறதுக்கு கடலுக்கு அடியிலேயே சுரங்க சாலை போட அரசாங்கம் திட்டம் போட்டுட்டு வருது.. என வெளிநாட்டு நண்பர்களிடமும், சொந்தங்களிடமும் நாம் செம கெத்து காட்டிக் கொண்டிருக்கிறோம்.
தொழில்நுட்பங்களும், போக்குரத்து எந்த அளவுக்கு நாளுக்கு நாள் அசுர வளர்ச்சியை எட்டுகிறதோ, அதே அளவு அபாயத்தையும் அவை நமக்கு பரிசாக அளிக்கின்றன. சர்வதேச அளவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் மாசடைந்த பகுதிகளாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

அதற்கு முழு முதற் காரணம் காற்றில் பரவும் மாசுதான். இயற்கையையும், மக்களின் சுகாதாரத்தையும், காற்றையும் சீரழித்து விட்டு, புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டாடுவதற்குப் பெயர்தான் தொழில்நுட்ப வளர்ச்சியா? நிச்சயமாக இல்லை.
வாகனங்களில் இருந்து வெளியாகும் அளவுக்கு அதிகமான மாசுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு சுவாசப் பிரச்னைகளும், ஆஸ்துமாவும் வருவதற்கான காரணம் என்றால் நம்புவீர்களா? அதுதான் உண்மை. அதை மருத்துவர்கள் உறுதிபடுத்தியும் உள்ளனர்.
லைசென்ஸ் இல்லை, ஹெல்மெட் இல்லை என்று மாமூல் கேட்கும் நமது டிராஃபிக் போலீஸார், என்றைக்காவது மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழைக் கேட்டுள்ளனரா? ஆர்.சி.புத்தகம், இன்ஷுரன்ஸ் ஆகியவற்றுடன் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழையும் பராமரிப்பது கட்டாயம்.
சரி, அதையெல்லாம் வைத்திருந்து என்ன பிரயோஜனம். புகையைக் கக்கும் வாகனங்கள் தொடர்ச்சியாக காற்றின் தூய்மையை களங்கப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.
கரியமில வாயுவின் வீரியம், காற்றின் கன்னித்தன்மையை சூறையாடிக் கொண்டேதான் இருக்கின்றன. அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமே...
அப்படி ஒரு முயற்சியில் தற்போது மத்திய அரசு இறங்கியுள்ளது. இது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம். மாசுக் கட்டுப்பாடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அறிவித்தது.
கடந்த 2005-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தையும் ஒழித்துவிடப் போவதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 2.8 கோடி பழைய வாகனங்கள் இனி சாலையில் புகையைக் கக்க முடியாது. அந்த வாகனங்களை ஒப்படைத்துவிட்டு அதற்கு உரிய இழப்பீட்டை வாங்கிக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி தெரிவித்துள்ளது.
பிஎஸ்-ஐவி எனப்படும் அந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் அமலாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
எது எப்படியோ, சாலையில் செல்லும்போது நம்மால் நிம்மதியாக பெருமூச்சு விட முடிந்தால் அதுவே ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி எனக் கருதிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








