தலிபன் அச்சம்: இந்தியருக்கு கார் விற்பனை செய்ய மறுத்த மெர்சிடைஸ்!
முன்பெல்லாம், இனப் பாகுபாடுகளும், நிறரீதியான பாரபட்சங்களும் கொழுந்து விட்டு எரி்ந்து கொண்டிருந்தன. இப்போதுதான் அதெல்லாம் நீங்கி நாம் நிம்மதியாக வாழ்கிறோம்.... இப்படி ஒரு கருத்தை நமது அடுத்த தலைமுறையாவது கூறுமா என்பது சந்தேகமாக உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்காக சமூகத்தில் சில பிரிவினருக்குப் புறக்கணிக்கப்பட்டு வரும் நீதி இன்றளவும் தொடர்கிறது.
சரி அதற்கும், இந்தக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறீர்களா? இருக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்கு பென்ஸ் காரை விற்பனை செய்ய மறுத்துள்ளது அந்நாட்டு மெர்சிடைஸ் நிறுவனம். தலிபான் பயங்கரவாதிகளுக்கு அந்த கார் ஏற்றுமதி செய்யப்படலாம் என்ற அச்சத்தில்தான் நாங்கள் அந்தக் காரை இந்தியருக்கு விற்பனை செய்யவில்லை என்று விளக்கமளித்துள்ளது மெர்சிடைஸ் நிறுவனம்.

ஆனால், இன ரீதியாக தம்மை புறக்கணித்ததாக சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் மெர்சிடைஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்தவர் சுர்ஜித் பஸ்ஸி (50). இந்திய வம்சாளியினரான இவர், கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கிறார்.
போஷ் மெர்சிடைஸ் எஸ்யூவி கார் ஒன்றை மாதத் தவணையில் வாங்க திட்டமிட்ட பஸ்ஸி, அந்நிறுவனத்தை அணுகியுள்ளார். முன்பணமாக ரூ.1000 டாலர்களை செலுத்திய அவர், மாதத் தவணைக்கான காசோலைகளையும் சமர்ப்பித்துள்ளார். மேலும், கார் வாங்குவதற்கான அனைத்து ஆவணங்களை மெர்சிடைஸ் நிறுவனத்திடம் கொடுத்த பஸ்ஸி, அதுதொடர்பான நடைமுறைகளையும் நிறைவு செய்தார்.
இந்த நிலையில், சிறிது நாள்கள் கழித்து சம்பந்த நிறுவனத்தின் மேலாளர் பஸ்ஸியை அழைத்து, உங்களுக்கு காரை விற்பனை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
தலிபான்களுக்கு சட்டவிரோதமாக கார்களை ஏற்றுமதி செய்யும் பகுதியில் பஸ்ஸி வசிப்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக மெர்சிடைஸ் நிறுவனம் தெரிவித்தது.
எத்தனையோ விளக்கங்களை பஸ்ஸி கூறிப்பார்த்தும் அதை அந்நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதையடுத்து நீதிமன்றத்தின் கதவைத் தட்டியிருக்கிறார் பஸ்ஸி.
சுமார் ரூ.8.4 கோடி இழப்பீடு கோரி மானநஷ்ட வழக்கை மெர்சிடைஸ் நிறுவனம் மீது தொடுத்திருக்கிறார் அவர்.
இந்த வழக்கு நியூயார்க் நகரின் தென்மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. நிற ரீதியாகவும், இன ரீதியாகவும் பாரபட்சம் காட்டி தனக்கு கார் விற்பனை செய்ய மெர்சிடைஸ் நிறுவனம் மறுத்து விட்டதாக பஸ்ஸி, தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் முடிவு, எவருக்கு சாதகமாக இருந்தாலும் சரி... இனரீதியாக ஒருவருக்கு உரிமைகள் புறக்கணிப்படுமேயானால், அதைவிட பெருங்குற்றம் உலகில் வேறு எதுவும் இல்லை.


Click it and Unblock the Notifications








