இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பஸ்... அசோக் லேலண்ட் அறிமுகம்!
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் பஸ் மாடலை சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அசோக் லேலண்ட் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.
அசோக் லேலண்ட் சர்க்யூட் என்ற பெயரில் இந்த புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல் அறிமுகமாகியிருக்கிறது. இந்த பஸ்சின் சிறப்பம்சங்கள் மற்றும் இதர முக்கிய விஷயங்களை தொடர்ந்து படிக்கலாம்.

இந்திய சாலைநிலைகளுக்கு ஏற்றதாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட எலக்ட்ரிக் பஸ் என்ற பெருமையை அசோக் லேலண்ட் சர்க்யூட் பெறுகிறது. மேலும், சர்க்யூட் வரிசையில் பல இருக்கை வசதி கொண்ட மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன புகையால் மூச்சுத் திணறி வரும் பெரு நகரங்களில் இந்த பஸ்சை விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு அசோக் லேலண்ட் திட்டமிட்டுள்ளது.

பேட்டரியில் இயங்கும் பஸ் என்பதால், புகை பிரச்னை இல்லை. அத்துடன், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் பஸ்களைவிட அதிர்வுகள் மற்றும் சப்தம் குறைவான பயணத்தை வழங்கும் என்று அசோக் லேலண்ட் கூறியிருக்கிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு, மூன்று மணிநேரம் பிடிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 75 கிமீ வேகம் வரை செல்லும். எனவே, நகர்ப்புறத்தில் இயக்குவதற்கு மிகச் சிறப்பானதாக இருக்கும்.

இந்த பஸ்சில் தீப்பிடிப்பதை கண்டறிந்து தடுக்கும் விசேஷ தொழில்நுட்பம் உள்ளது. பஸ்சின் இயக்கம் மற்றும் பிரச்னைகளை குறித்து கண்டறிந்து தெரிவிப்பதற்கான நவீன தொழில்நுட்பங்களும் உள்ளது. எனவே, பாதுகாப்பிலும் மிகச்சிறப்பானதாக தெரிவிக்கப்படுகிறது.

பஸ் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்கும் வசதியும் இருப்பதால், டிராவல்ஸ் அதிபர்கள் இருந்த இடத்திலிருந்தே பஸ்சின் நகர்வை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.

இந்த பஸ்சின் இருக்கைகள் மிக அகலமாகவும், வசதியாகவும் இருக்கிறது. அத்துடன், பயணிகளின் வசதிக்காக மொபைல்போனை சார்ஜ் செய்துகொள்வதற்கான யுஎஸ்பி போர்ட் வசதி, வைஃபை வசதி உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

டிரைவரை சேர்த்து 31 பேர் பயணிக்கும் வசதியுடன் இந்த பஸ் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது தமிழகத்தின் விராலிமலையில் உள்ள அசோக் லேலண்ட் ஆலையிலும், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள ஆலையிலும் இந்த பஸ் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும், தேவைப்பட்டால் நாடுமுழுவதும் அமைந்திருக்கும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 7 ஆலைகளிலும் கூட இந்த சர்க்யூட் வரிசையிலான எலக்ட்ரிக் பஸ்களை உற்பத்தி செய்ய முடியும் என்று அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

இந்த எலக்ட்ரிக் பஸ் தயாரிப்பு திட்டம் ரூ.500 கோடி முதலீட்டில் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்சிற்கான பேட்டரிகள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. பஸ்சின் உற்பத்தி செலவில் 60 சதவீதம் பேட்டரிக்காக செலவிடப்படுவதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் 50 சர்க்யூட் எலக்ட்ரிக் பஸ்களையும், அடுத்த ஆண்டு 200 சர்க்யூட் எலக்ட்ரிக் பஸ்களையும் விற்பனை செய்ய அசோக் லேலண்ட் இலக்கு வைத்துள்ளது. மத்திய அரசின் ஃபேம் திட்டத்தின் கீழ் மானியத்தை பெற இருக்கும் முதல் எலக்ட்ரிக் பஸ் மாடல் என்பதும் அசோக் லேலண்ட் சர்க்யூட் பஸ்சிற்கு கிடைத்திருக்கும் மற்றொரு பெருமை.


Click it and Unblock the Notifications








