விரைவில் கார்களின் பாதுகாப்பு, விலைகள் அதிகரிக்கும் - ஏன் தெரியுமா?
ஏப்ரல் 2018 முதல் இந்தியாவில் கார்களின் பாதுகாப்பு மற்றும் விலைகள் இரண்டுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், ஏப்ரல் 2018 காலகட்டத்தில் இருந்து ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் கார்களில் சேர்க்கப்பட உள்ளது. இதன் பயணியர்களின் பாதுகாப்பும் ஒட்டுமொத்தமாக அதிகரிக்க உள்ளது.
விரைவில் சேர்க்கப்பட உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அதனால் ஏற்பட உள்ள விலை ஏற்றம் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கூட்டப்படும் அம்சங்கள்;
வரும் ஏப்ரல் 2018 முதல், இந்தியாவில் விற்கப்படும் கார்களில், சீட் பெல்ட் அலாரம், ஸ்பீட் வார்னிங் பீப்ஸ் எனப்படும் வேக அதிகரிப்புக்கு எச்சரிக்கை விடுக்கும் கருவிகள், ரியர் சென்சார்கள் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்பட உள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்து பயணியர் கார்களிலும் கட்டாயம் பொருத்தப்பட வேண்டியதாக இருக்கும்.

காரணம்;
இந்தியாவில் விபத்துகளை குறைக்கும் நோக்கில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிப்பது தொடர்பான முடிவு எடுத்துள்ளது. இது தொடர்புடைய மசோதாவிற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் சில தினங்களுக்கு முன்பு தான் ஒப்புதல் அளித்தார்.

விலை அதிகரிக்கும் வாய்ப்பு;
விபத்துகளை குறைக்கும் நோக்கில், இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதனால் கார்களின் விலைகளும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அச்சம் நிலவுகிறது.
எனினும், கார்களில் இத்தகைய பாதுகாப்பு அம்சங்களை கூடுதலாக சேர்த்தாலும், எந்த விதமான விலை அதிகரிப்பும் இருக்க வாய்ப்புகள் இல்லை என்றே மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஏற்கனவே பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் நடுத்தர மற்றும் ஹை-என்ட் எனப்படும் டாப்-என்ட் கார் வேரியன்ட்களில் இத்தகைய ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை சேர்த்து வழங்கி வருகின்றனர்.

ஏர்பேக்;
கார்களில் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமான ஏர்பேக்குகளும், அனைத்து கார்களிலும் பொருத்தப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதனால், விபத்துகள் நிகழும் நேரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

ஸ்பீட் அலர்ட்;
ஸ்பீட் அலர்ட் அல்லது ஸ்பீட் வார்னிங் பீப்ஸ் எனப்படும் அம்சம், கார்களின் பாதுகாப்பில் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. ஸ்பீட் அலர்ட் அம்சம் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், காரை இயக்குபவர்கள் தங்களின் காரை மணிக்கு 60 கிலோமீட்டர் என்ற அளவிற்கும் கூடுதலான வேகத்தில் கார்களை இயக்கினால், கார்கள் தாமாகவே பீப் சத்தம் எழுப்பும்.
மீண்டும், மணிக்கு 80 கிலோமீட்டர் என்ற அளவிற்கும் கூடுதலான வேகத்தில் சென்றால் கார்கள் மீண்டும் பீப் சத்தம் எழுப்பும். அதையும் மீறி, மணிக்கு 90 கிலோமீட்டர் அல்லது அதற்கும் கூடுதலான வேகத்தில் கார்களை இயக்கினால், கார்கள் பீப் சத்தத்தை தொடர்ந்து எழுப்பி கொண்டதே இருக்கும்.
இந்த சத்தத்தை, கார் இயக்குபவர்களால் கட்டுப்படுத்த இயலாது. இந்த சத்தத்தை குறைக்க வேண்டும் என்றால், கார் இயக்குபவர்கள், தங்களின் வேகத்தை குறைக்க வேண்டும் அல்லது காரை நிறுத்த வேண்டும்.

ரியர் பார்க்கிங் சென்சார்கள்;
ரியர் பார்க்கிங் சென்சார்கள் என்பது கார்கள், ஏதேனும் பொருள் அல்லது மனிதர்கள் அல்லது மற்றொரு கார் / வாகனத்திற்கு அருகில் நெருங்கும் பட்சத்தில், கார் இயக்குபவர்களுக்கு சமிக்ஞைகளை வழங்குகிறது.
இதனால், பார்க்கிங் செய்யும் நேரத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களை குறைக்க முடியும்.

சீட் பெல்ட் அலாரம்;
சீட் பெல்ட் அலாரம் அம்சமானது, டிரைவர் மற்றும் முன் இருக்கையில் உள்ள பயணி, சீட் பெல்ட் அணியாத பட்சத்தில் எச்சரிக்கை வழங்கும் வகையில் செயல்பட துவங்கும்.

சென்ட்ரல் லாக்;
மேலும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், தற்போது கார்களில் ஸ்டாண்டர்ட் அம்சமாக உள்ள சென்ட்ரல் லாக் முறையை விலக்கி கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், விபத்துகள் நிகழும் நேரங்களில் சென்ட்ரல் லாக் சிஸ்டம் சரியாக செயல்படாமல் சிக்கி (ஜாமாகி) கொள்கிறது.
சென்ட்ரல் லாக்கிற்கு பதிலாக அனைத்து பக்கங்களிலும் கார் லாக் மேனுவலாக செயலபடும் வகையில் மாற்றப்படும்.

எதிர்பார்ப்பு;
இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்பாட்டிற்கு வந்தால், இந்தியாவில் கார் விபத்துகளின் எண்ணிக்கைகள் குறையும் என அரசு எதிர்பார்க்கிறது.

வரவேற்பு;
சியாம் அல்லது சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுஃபேக்ட்சுரர்ஸ் அசோசியேஷன் எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் கொண்டு வர உள்ள மாற்றங்களுக்கு வரவேற்பு அளித்துள்ளது.
ஆனால், கடுமையான இந்த புதிய சட்டங்கள் அனைத்தும், சரியான முறையில் நடைமுறைப்படுத்தபட்டால் மட்டுமே, எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை கொண்டு வர முடியும் என சியாம் தெரிவித்தது.

இறுதி கருத்து;
ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் சாலை விபத்துகள் நிகழும் நாடுகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் பட்டியலில், இந்தியா முன்னணியில் உள்ளது. இதனால், ஒவ்வொரு வருடமும் லட்ச கணக்கான மக்கள் இந்தியாவில் உயிரிழக்கின்றனர்.
விபதுக்களையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கும் நோக்கில், அரசு எத்தகைய நடவடிக்கைகள் கொண்டு வந்தாலும், அவை வரவேற்கப்பட வேண்டியவையே என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications








