டிரைவர் இல்லாமல் செல்லும் தானியங்கி பஸ்... ஜப்பானில் அறிமுகம்...!!
ஆதாமும் ஏவாளும் இந்த உலகில் தோன்றிய முதல் மனிதர்கள் என்று பைபிள் கூறுகிறது. பாவக் கனியை உண்டதில் இருந்துதான் இந்த கலியுக வாழ்க்கை தொடங்கியது என கதைகள் தெரிவிக்கின்றன.
அதை எல்லாம் தெரிவித்த காப்பியங்களும், புராணங்களும் மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டத் தவறிவிட்டன. ஆதி மனிதனில் இருந்து ஜான் ஆப்ராஹம் வரை, ஆதி மனுஷியிலிருந்து ஆலியா பட் வரை நாம் பரிணாமம் அடைந்தது எப்படி? அதற்கான விடையைத் தேடி, ராகுல் சங்கிருத்தியாயனின் வால்காவிலிருந்து கங்கை வரை நூலைப் படித்தால் நமக்கு ஓரளவு தெளிவு பிறக்கும். தீயையும், சக்கரத்தையும் கண்டுபிடித்ததே நவநாகரீக உலகின் முதல் படி என்பது உண்மை. உருட்டுக் கட்டைகளை அடுக்கி வைத்து சக்கரமாக பயன்படுத்தியதுதான் இப்போது ஜாகுவார், ஆடி என பல கார்களாக உருமாற்றமடைந்துள்ளன.

அப்படியாக புதிய தொழில்நுட்பங்கள், ஆட்டோ மொபைல் உலகுக்குள் அன்றாடம் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டேதான் இருக்கின்றன.
அதில் முத்தாய்ப்பாக ஜப்பானின் டிஎன்ஏ என்ற மொபைல் இன்டர்நெட் நிறுவனம் தானாக இயங்கும் ரோபோ பஸ்ஸைக் கண்டுபிடித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தானியங்கி மோட்டார் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தானியங்கி பஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கென ஜப்பானின் முன்னணி டெக்னாலஜி நிறுவனங்களை ஒருங்கிணைந்து பிரத்யேக அமைப்பையும் டிஎன்ஏ நிறுவனம் உருவாக்கியுள்ளது.
13 அடி நீளம் கொண்ட அந்த பஸ்ஸில் ஒரே நேரத்தில் 12 பேர் பயணிக்கலாம். 40 கிலோ மீட்டர் வரை அந்த பஸ் தானாகவே இயங்கும் திறன் கொண்டது.
கிட்டத்தட்ட அதன் வடிவமைப்புப் பணிகள் நிறைவடைந்து தற்போது சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த மாதத்தில் இருந்து இந்த பஸ்ஸை பெரிய பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள், பிரம்மாண்ட வளாகங்கள் ஆகியவற்றில் பயன்படுத்த டிஎன்ஏ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், மேலும் பல பஸ்களை ஜப்பான் முழுக்க உலவ விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டிரைவர்கள் இருக்கும் வாகனங்களை நம்பிதான் பயணிக்க முடிவதில்லை. சாலையில் படுத்திருப்பவர்கள் மீது ஏற்றி சவக் குழி பறித்து விடுகின்றனர் சில ஓட்டுநர்கள். ரோபோக்கள் மது அருந்தாது என்பதால் இதுபோன்ற பஸ்களில் நம்பி ஏறிப் பயணிக்கலாம்.


Click it and Unblock the Notifications








