ஃப்யூவல்செல் டெக்னாலஜியை மேம்படுத்த ஃபோர்டு நிறுவனத்துக்கு 60 லட்சம் டாலர்கள் நிதி உதவி
நம்மைச் சுற்றி இருக்கும் இந்த புற உலகில், பார்க்கும் விஷயங்கள் எல்லாம் மெல்ல மெல்ல நஞ்சேறிக் கொண்டே வருகின்றன. உண்ணும் உணவு கலப்படமானது: குடிக்கும் நீர் அமிலமானது: சுவாசிக்கும் காற்று ரசாயனத்தின் நெடியாக மாறியது: மக்களின் மனிதாபிமானம் மாசுபட்டது: இத்தனைக்கும் நடுவே சுழன்று கொண்டேதான் இருக்கிறது இந்த உலகம்...
நீரையும், காற்றையும் மானபங்கப்படுத்தினால், மண்ணை மட்டுமன்றி நம் அடுத்த தலைமுறையையும் அவை மலடாக்கி விடும் என்பது புரிவதில்லை இந்த மானுடத்துக்கு. அதிலும் குறிப்பாக காற்றை மிக அலட்சியமாக நாம் துகிலுரிக்கிறோம். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றில் வெளிவந்த உண்மை, நமது முகத்தில் அறைவது போல இருந்தது. நிலைமை இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் சுவாசிக்கும் காற்றே நமக்கு எமனாக மாறிக் கொல்லும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

வாகனங்களில் இருந்து வெளியேறும் அபரிதமான கரியமல வாயுதான் இந்தச் சூழலை காயப்படுத்துகிறது என்பது நிஜம். இதற்கு தீர்வு காண்பது எப்படி? அதில் அனைவருக்கும் பங்களிப்பு உள்ளது. அரசு, தனியார் நிறுவனங்கள் முதல் வெகுஜனம் வரை.
அப்படி ஒரு சமூகப் பங்களிப்பை அமெரிக்க அரசு அண்மையில் மேற்கொண்டுள்ளது. அதாவது ஃபூயல் செல் (எரிபொருளில் இருந்து வேதியியல் மாற்றம் வழியே மின்சக்தியை உருவாக்குது) முறையை கார்களில் புகுத்துவதற்கான ஆய்வை ஃபோர்டு நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதி்ப்பில்லாத கார்களாக அவை இருக்கும் என நம்பப்படுகிறது.
அந்த ஆய்வுக்காக 60 லட்சம் டாலர்களை அமெரிக்க அரசு ஃபோர்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இதைக் கொண்டு ஆராய்ச்சிப் பணிகளை விரைந்து நடத்துமாறும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கருத்துப் பதிவு செய்த அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண பிரதிநிதி டெப்பி டிங்கல், அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது அவசியம் என்பதால், அந்தப் பணியை செய்து கொண்டிருக்கும் ஃபோர்டு நிறுவனத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தத் தொகையை வைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு குறைந்த விலையில் ஃபூயல் செல் கார்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாம் ஃபோர்டு நிறுவனம்.
சரி, இந்தியாவில் அப்படி ஏதாவது அரசு ஊக்கம் வழங்குகிறதா என்று ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். அப்படி எதுவுமே இல்லை... இதுபோன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயங்களுக்காக இந்திய கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பதே நமது இப்போதைய எதிர்பார்ப்பு...


Click it and Unblock the Notifications








