டிரைவிங் லைசென்ஸ் கட்டணம் நான்கு மடங்கு உயர்கிறது!
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களில் பறக்கும் பதின் பருவ இளைஞர்கள் ஏராளம் என்றால், ஏழு ---- வயதாகியும் இன்னும் லைசென்ஸ் எடுக்காமல் திருட்டுத்தனமாக பைக் ஓட்டும் பெருசுகளும் பலர் உள்ளனர்.
ஓட்டுநர் உரிமம் என்பது கட்டாயம் என்று ஒருபக்கம் எத்தனைதான் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டாலும், பயங்கரவாதிகள் ரேஞ்சுக்கு தலைமறைவாகவே சாலையில் சுற்றித் திரியும் விடாக்கண்டர்களைத் திருத்த முடிவதில்லை. குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் உரிமங்களை வழங்கினாலும் சிலர் அதை வாங்க முயற்சிப்பதில்லை.

இந்த நிலையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் டிரைவிங் லைசென்ஸ் கட்டணத்தில் அரசு கைவைக்கப் போகிறதாம்.
இதுதொடர்பான திட்ட வரைவு அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அண்மையில், அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளது. இப்போது ரூ.320-க்கு புதிதாக லைசென்ஸ் எடுத்துவிடலாம். புதிய கட்டணத்தின்படி ரூ.1200 செலுத்த வேண்டுமாம்.
கிட்டத்தட்ட நான்கு மடங்கு கட்டணத்தை மத்திய அரசே உயர்த்தத் திட்டமிட்டால், சும்மா இருப்பார்களா நம் டிரைவிங் ஸ்கூல் ஓனர்கள்? ஓட்டுநர் பயிற்சி மற்றும் லைசென்ஸ் பெற்றுத்தர தற்போது ரூ.2,500 பெறுபவர்கள், புதிய கட்டணக் கொள்கையால் அதை ரூ.10,000 வரை உயர்த்தத் திட்டம் தீட்டி வருகிறார்களாம்.
பழகுநர் உரிமம் எனப்படும் எல்எல்ஆர் பெறுவதற்கான தேர்வை எழுதுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களில் இப்போது ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அது இனிமேல் ரூ.300-ஆக உயரவுள்ளது.
அதன் பிறகு, எட்டு போட்டு காட்டி ஓட்டுநர் உரிம அட்டை வாங்குவோமே, அதற்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.150. அடுத்த சில நாள்களுக்குப் பிறகு நீங்கள் அதற்காக ரூ.400 செலுத்த வேண்டியிருக்கும்.
அதேபோல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.50-இல் இருந்து ரூ.200 ஆக உயர்கிறது. சர்வதேச அளவிலான ஓட்டுநர் உரிமக் கட்டணம் ரூ.500-இலிருந்து ரூ.1000-ஆக அதிகரிக்க உள்ளது.
இதைத் தவிர இதர ஆவணங்கள் மற்றும் பரிசீலனைக் கட்டணங்களையும் வசூலிக்க உள்ளதாம் மத்திய அரசு. புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தொகை ரூ.1200-ஆக உயர்வதில் மக்களுக்கு பெரிய அளவில் சுமை இருக்காது என நம்பலாம். ஆனால், அவர்கள் பயப்படுவதெல்லாம் ஆர்டிஓ அலுவலகங்களில் இனி எவ்வளவு கப்பம் கட்ட வேண்டியிருக்கும் என்பதை நினைத்துத்தான்...
ஓட்டுநர் உரிமக் கட்டணங்களை உயர்த்தும் அதேவேளையில், ஆர்டிஓ அலுவலகங்களில் புரையோடிப் போன லஞ்சத்தை வேரறுக்க அதிகப்படியான முக்கியத்துவத்தை அரசு வழஙக வேண்டும் என்பதே மக்களின் எதி்ர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications








