கூகிளின் தானியங்கி கார் திட்டத்திலிருந்து விலகினார் கிரிஸ் அர்ம்சன்
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் கூகிள் நிறுவனம், செல்ஃப் டிரைவிங் கார் (Self Driving Car) எனப்படும் தானியங்கி கார் வடிவமைக்கும் திட்டத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளது. கூகிளின் இந்த தானியங்கி கார் திட்டம், டிரைவரில்லா கார் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது.
கூகிளின் செல்ஃப் டிரைவிங் கார், டிரைவரில்லா கார் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக நீடித்து வருகிறது.
கூகிளின் செல்ஃப் டிரைவிங் கார் திட்டம் துவங்கிய நேரத்தில், ஹூண்டாய் நிறுவனத்தின் முன்னாள் எக்சிகியூட்டிவ் பதிவியில் இருந்த ஜான் கிராஃப்கிக் தான் தலைமை எக்சிகியூட்டிவ் (Chief Executive) என்றும், கிரிஸ் அர்ம்சன் தான் இத்திட்டத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (Chief Technical Officer) என்றும் நியமிக்கபட்டனர்.

கூகிளின் தானியங்கி கார் திட்டம் துவங்கிய காலம் முதல் கிரிஸ் அர்ம்சன் தான், இத்திட்டம் தொடர்பாக மக்களுக்கு தெரிந்த முகமாக (ஒளி விளக்கு போல்) திகழ்ந்தார் என்றாலும் அது மிகையாகாது. கிரிஸ் அர்ம்சன், கூகிள் நிறுவனத்தில் இருந்து விலகுகிறார் என்ற செய்தியை ஜான் கிராஃப்கிக் ட்விட்டர் மூலம் உறுதி செய்தார்.
கூகிள் நிறுவனத்தில் இருந்து தனது விலகல் குறித்து, ஒரு பிலாக்கில் கருத்து தெரிவித்த கிரிஸ் அர்ம்சன், "தான் இனி புதிய சவால்களுக்கு தயாராக உள்ளதாகவும், ஆனால், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை" என்றும் கூறினார்.
மேலும், ராய்டர்ஸ் நிறுவனத்திற்கு அளித்த செய்தியில், "சிறிது காலம் எடுத்து கொண்டு, கூகிளுக்கு வெளியே உள்ள பிற பரிணாமங்கள் குறித்தும் ஆராய்ந்து, தெரிந்து கொள்ள விருப்பம் கொண்டுள்ளாதவும்" கிரிஸ் அர்ம்சன் தெரிவித்தார்.
கூகிளின் செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்தின் பேச்சாளரான ஜாஹ்னி லூ அவர்களும், கிரிஸ் அர்ம்சனின் விலகலை உறுதி செய்து, கிரிஸ் அர்ம்சனுக்கு புகழாரம் சூட்டினார். அப்போது, "7 வருடங்களுக்கு முன்னர், ஒரு கார் தானாக இயங்க முடியும் என்பது வெறும் யோசனையாக மட்டுமே இருந்தது. செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்திற்கு பெரும் தூண் போல் விளங்கிய கிரிஸ் அர்ம்சன், வெறும் யோசனையாகவும், ஆராய்ச்சி நிலையில் இருந்த செல்ஃப் டிரைவிங் கார் திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்து, அதை நிஜத்தில் சாத்தியப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார்" என தெரிவித்தார்.
இந்நிலையில், எக்ஸ் என்றும் அழைக்கப்படும் கூகிளின் செல்ஃப் டிரைவிங் புரோஜெக்ட் (Google's self driving project), இந்த ஆண்டு தனி நிறுவனமாகவே மாற உள்ளது. இதன் முதல் ஜெனெரல் கவுன்சில் கூட நியமிக்கபட்டுள்ளது.
இதுவரை, கூகிளின் செல்ஃப் டிரைவிங் காரானது, டெக்சாஸ், கலிஃபோர்னியா, அரிஸோனா மற்றும் வாஷிங்டன் ஆகிய பகுதிகளில், 1.8 மில்லியன் மைல்கள் பயணித்து சோதனைகள் மேற்க்கொண்டுள்ளது.
செல்ஃப் டிரைவிங் கார்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்வது குறித்து எந்த விதமான கால அட்டவணையையும் வகுத்து கொண்டு செயல்படவில்லை என கூகிள் நிறுவனம் தெளிவுபடுத்தியது.


Click it and Unblock the Notifications








