ஜனவரியில் ஹோண்டா கார் விலை உயர்கிறது
ஹோண்டா கார்களின் விலை உயர்த்தப்பட உள்ளது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
புத்தாண்டில் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு கார் விலை உயர்வு அறிவிப்புகள் மிரட்டி வருகின்றன. டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பல முன்னணி கார் நிறுவனங்கள் கார் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டு விட்டன.
அந்த வரிசையில் இப்போது ஹோண்டா கார் நிறுவனமும் இணைந்துள்ளது. அனைத்து கார்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா பிரியோ, அமேஸ், சிட்டி மற்றும் அக்கார்டு உள்ளிட்ட பல முன்னணி கார் மாடல்களின் விலை உயர இருக்கிறது. அதிகபட்சமாக 3 சதவீதம் வரை கார்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.

ரூபாய் பரிமாற்று விகிதத்தில் நிலவும் நிலையற்றத் தன்மை, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை உயர்வு நடவடிக்கையை எடுக்க வேண்டியதாயிற்று என ஹோண்டா கார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் யசிரோ உனோ தெரிவித்துள்ளார்.

சமீபத்திய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு காரணமாக, கார் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தால் ஹோண்டா கார் நிறுவனத்தின் விற்பனை கணிசமாக இழப்பை சந்தித்திருப்பது தெரிகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் 14,712 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 8,029 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 45 சதவீதம் விற்பனை சரிந்துவிட்டது.

இருப்பினும், மேற்கூறிய காரணங்களால் விற்பனை மந்த கதியில் இருந்தாலும் விலை உயர்வு நடவடிக்கை அவசியமாக படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனைய கார் நிறுவனங்களும் விலை உயர்வு அறிவிப்பை அடுத்த சில நாட்களில் வெளியிடும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








