ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியின் இந்திய வருகை எப்போது?
புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
க்ராஸ்ஓவர் ரக கார்களுக்கான வரவேற்பு இந்தியாவில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், பல புதிய மாடல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், ஹோண்டா கார் நிறுவனம் அடுத்து ஒரு புதிய க்ராஸ்ஓவர் ரக காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹோண்டா டபிள்யூஆர்வி என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அண்மையில் பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் நடந்த வாகன கண்காட்சியில்தான் இந்த புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி கார் பொதுமக்கள் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது காம்பேக்ட் ரக எஸ்யூவி வகை காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கார் ஏற்கனவே இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது ஹோண்டா ஆலையில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோண்டா ஜாஸ் காரின் அடிப்படையிலான க்ராஸ்ஓவர் மாடலாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், உருவ ஒற்றுமைகள் அதிகம் தென்படுகின்றன. இருப்பினும், எஸ்யூவி வகை மாடலுக்கு நிகரான சிறப்பு அம்சங்களுடன் மாறுதல்கள் மற்றும் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி காரில் இருப்பது போன்றே, முன்புறத்தில் வலிமையான க்ரோம் பட்டை க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்புற பம்பர் எஸ்யூவி கார்களுக்கு உரிய வலிமையான தோற்றத்தை கொண்டுள்ளது.

பக்கவாட்டில் வீல் ஆர்ச்சுகள் மற்றும் கதவுகளின் அடிப்பாகத்தில் பாடி கிளாடிங் எனப்படும் வலுவான பிளாஸ்டிக் சட்டம் கொடுக்கப்பட்டு எஸ்யூவி வகை காராக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய கார் பிரேசில் நாட்டு ஹோண்டா ஆராய்ச்சி மையத்தின் பொறியாளர் குழு முதன்மை பங்களிப்பை வழங்கி இருக்கிறது.

ஹோண்டா ஜாஸ் கார் போன்று இல்லாமல், இதன் கிரவுண்ட் கிளிரயன்ஸ் எனப்படும் காருக்கும், தரைக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மோசமான சாலைகளில் கூட எளிதாக செல்லும்.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஹோண்டா டபிள்யூஆர்வி எஸ்யூவியில் 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க்கையும் வழங்க வல்லதாக இருக்கும்.

டீசல் மாடலில் 1.5 லிட்டர் ஐ-டிடெக் எஞ்சின் இருக்கும். அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். வெளிநாடுகளில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டதாக வருகிறது. இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஆப்ஷன்களில் கிடைக்கும்.

அடுதத ஆண்டு மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த கார் ரூ.7.5 லடசம் முதல் ரூ.10.5 லட்சம் வரையிலான ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபியட் அவென்ச்சுரா, டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ், ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








