அமெரிக்காவிடம் கையேந்த தேவையில்லை... விரைவில் இந்தியாவின் சுதேசி நேவிகேஷன் சிஸ்டம்!
செயற்கைகோள்கள் மூலமாக செயல்படும் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் கருவி பொருத்தப்பட்ட கார்களின் பயன்பாடு மற்றும் அனுகூலங்கள் குறித்து பலருக்கு தெரிந்திருக்கும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கார் உள்ளிட்ட வாகனங்களில் நேவிகேஷன் எனப்படும் வழிக்காட்டு வசதியையும், கார் திருடுபோகும் பட்சத்தில், அது எங்கிருக்கிறது என்பதை எளிதாக கண்டறிவதற்கும் இந்த குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் தொழில்நுட்பம் பயன்படுகிறது. மேலும், ராணுவத்திலும் இதன் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆனால், இந்த குளோபல் பொசிஷனிங் சிஸ்டத்தின் கட்டுப்பாடு தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உலகின் சில நாடுகள் சொந்த குளோபல் பொசிஷனிங் சிஸ்டத்தை பயன்படுத்துகின்றன. இந்த நிலையில், இந்தியாவுக்கென பிரத்யேகமான புதிய ஜிபிஎஸ் தொழில்நுட்ப வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த சுதேசி ஜிபிஎஸ் சிஸ்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் விரைவில் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை காணலாம்.

சுதேசி ஜிபிஎஸ்
இந்தியன் ரீஜினல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் என்பதன் சுருக்கமாக ஐஆர்என்எஸ்எஸ் என்ற குறியீட்டுப் பெயரில் நமது ஜிபிஎஸ் தொழில்நுட்பம் அழைக்கப்படுகிறது.

சிக்னல் தரம்
அமெரிக்காவின் ஜிபிஎஸ் சிஸ்டம் 24 செயற்கைகோள்களை வைத்து உலக அளவிலான சேவை வழங்குவதால் சிக்னல் தரம் துல்லியமாக இருக்காது. ஆனால், நமது ஐஆர்என்எஸ்எஸ் நேவிகேஷன் சிஸ்டத்தின் சிக்னல் தரம் மிக சிறப்பாக இருக்கும்.

துல்லியம்
இந்திய எல்லையிலிருந்து 1,500 கிமீ தூரம் வரை இந்த ஜிபிஎஸ் சிஸ்டத்தை பயன்படுத்த முடியும். மேலும், ஐஆர்என்எஸ்எஸ் நேவிகேஷன் சிஸ்டம் 20 மீட்டருக்குள் இருப்பிடத்தை மிக துல்லியமாக காட்டும்.

செயற்கைகோள்கள்
மொத்தம் 7 செயற்கைகோள்களுடன் இந்த ஐஆர்என்எஸ்எஸ் ஜிபிஎஸ் சிஸ்டம் இயங்கும். இதில், 4 செயற்கைகோள்களை வைத்து ஜிபிஎஸ் சேவையை துவங்க முடியும். கூடுதலாக இருக்கும் மூன்று செயற்கைகோள்கள் மூலமாக, தொழில்நுட்பத்தை செறிவூட்டும் நோக்கில் பயன்படும்.

5வது செயற்கைகோள்
கடந்த மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஐஆர்என்எஸ்எஸ்-1இ என்ற செயற்கைகோள் பிஎஸ்எல்வி-சி31 ராக்கெட்டில் வைத்து ஏவப்பட்டது. ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்திற்காக பயன்படுத்தப்பட உள்ள 7 செயற்கைகோள்களில் இது 5வது செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த இரண்டு செயற்கைகோள்களும் அடுத்த ஓரிரு மாதங்களில் ஏவப்பட உள்ளது.

சோதனை
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 4 செயற்கைகோள்களை வைத்து சோதனைகள் துவங்கிவிட்டன. விரைவில் ஏவப்பட உள்ள 2 செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்பட்டவுடன், வரும் ஜூலை மாதத்திலிருந்து நமது சொந்த ஜிபிஎஸ் சிஸ்டம் முழுமையாக இயங்கத் துவங்கும்.

பயன்பாடு
ரயில்வே துறை, நெடுஞ்சாலை போக்குவரத்து, ஆய்வுப் பணிகள், வாகனங்களுக்கான நேவிகேஷன், மொபைல்போன் நேவிகேஷன், சாட்டிலைட் மேப், தொலை தொடர்பு துறை மற்றும் வாகன போக்குவரத்து போன்றவற்றில் இந்த புதிய ஜிபிஎஸ் சிஸ்டத்தின் பங்கு மிக முக்கியமானதாக அமையும். அத்துடன் ராணுவத்தில் இதன் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் பெறும்.

கார் நேவிகேஷன்
கார் உள்ளிட்ட வாகனங்களில் இந்த ஐஆர்என்எஸ்எஸ் மூலமாக நிகழ்நேர வரைபடங்கள், வழிகாட்டும் வசதி, போக்குவரத்து நெரிசல் பற்றிய எச்சரிக்கை வசதி போன்ற பல விஷயங்களை பெற முடியும்.

ராணுவ பாதுகாப்பு
தற்போது அமெரிக்காவின் ஜிபிஎஸ் சிஸ்டத்தின் மூலமாக இயக்கப்படும் ராணுவ வாகனங்கள், போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை வெளிநாடுகள் கண்காணிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்தியாவுக்கென உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நேவிகேஷன் சிஸ்டத்தின் மூலமாக நமது ராணுவ வாகனங்களின் நகர்வுகளை வெளிநாடுகள் கண்காணிக்க முடியாது.

இன்னொரு அம்சம்
போர் முனைகளில் அருகில் இருக்கும் சக ராணுவ வாகனமா அல்லது எதிரியின் ராணுவ வாகனமா என்பதை கூட இதனை வைத்து துல்லியமாக கண்டுபிடித்து அதற்கேற்ப செயலாற்ற முடியும்.

இதர பயன்பாடு
குற்றவாளிகளின் நகர்வுகளை கண்காணிக்க முடியும். ரயில் தண்டவாளங்களிலும், வனச்சாலைகளிலும் விலங்குகள் அடிபடுவதை கூட தடுக்கும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், விவசாயிகளுக்கு தேவையான மண் வகை, வானிலை முன் அறிவிப்பு போன்றவற்றையும் இந்த சிஸ்டத்தின் மூலமாக மிக துல்லியமாக வழங்க முடியுமாம்.

பிற நாடுகளின் ஜிபிஎஸ்
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கலிலியோ என்ற பெயரிலும், சீனாவில் காம்பாஸ் என்ற பெயரிலும், ரஷ்யாவில் க்ளோஸ்நாஸ் என்ற பெயரிலும் அந்தந்த நாடுகளுக்கான சொந்த ஜிபிஎஸ் சிஸ்டம் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், இவற்றைவிட மிகவும் உயரிய தொழில்நுட்பம் கொண்டதாக ஐஆர்என்எஸ்எஸ் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

கையேந்த வேண்டாம்...
ஒருவேளை போர் அல்லது அரசியல் ரீதியிலான பிணக்குகள் ஏற்பட்டால், இந்த ஜிபிஎஸ் சேவையை அமெரிக்கா நிறுத்திவிடும் வாய்ப்பும் உள்ளது. எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. அது நமது நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாகவிடும். சொந்த நேவிகேஷன் அறிமுகமாகும் பட்சத்தில் இனி அமெரிக்காவிடம் இந்த விஷயத்தில் கையேந்த வேண்டிய நிலை ஏற்படாது.


Click it and Unblock the Notifications








