இசுஸு வாகன உற்பத்தி சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு மாற்றம்!
இசுஸு நிறுவனத்தின் எஸ்யூவி மற்றும் பிக்கப் டிரக் உற்பத்தி சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு மாற்றப்பட உள்ளது.
ஜப்பானை சேர்ந்த இசுஸு நிறுவனம் எம்யூ-7 என்ற பிரிமியம் எஸ்யூவி மாடலையும், டி-மேக்ஸ் என்ற பிக்கப் டிரக் மாடலையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இதுவரை சென்னை திருவள்ளூரில் அமைந்திருக்கும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் இந்த இரு வாகனங்களும் அசெம்பிள் செய்யப்பட்டு வந்தன.
இந்தநிலையில், ஆந்திர மாநிலம், ஸ்ரீசிட்டியில் ரூ.3,000 கோடி முதலீட்டில் புதிய வாகன ஆலையை இசுஸு நிறுவனம் அமைத்துள்ளது. இதையடுத்து, சென்னை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் இசுஸு வாகனங்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து இசுஸு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஷங்கர் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், " ஸ்ரீசிட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆலைக்கு வாகன உற்பத்தியை மாற்ற முடிவு செய்துள்ளோம்.
தற்போது விற்பனைக்கு போதுமான வாகனங்கள் கையிருப்பு உள்ளதால், சென்னை ஹிந்துஸ்தான் ஆலையில் எங்களது வாகன உற்பத்தியை நிறுத்தியிருக்கிறோம். விரைவில் ஸ்ரீசிட்டியில் உள்ள ஆலையில் உற்பத்தி துவங்க திட்டமிட்டிருக்கிறோம்," என்று கூறினார்.
ஸ்ரீசிட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் இசுஸு மோட்டார்ஸ் வாகன ஆலையில் ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. எதிர்கால்தில் ஆண்டுக்கு 1.20 லட்சம் வாகனங்கள் வரை உற்பத்தி செய்யும் அளவுக்கு இந்த ஆலையில் கட்டமைப்பு வசதிகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








