முழுக்க முழுக்க பேட்டரியில் இயங்கும் இந்தியாவின் முதல் மின்சார பஸ்!
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் விதத்தில், பெட்ரோல், டீசலில் இயங்கும் பழைய வாகனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது.
இதனால், எதிர்காலத்தில் மின்சார வாகனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. இதனை மனதில் கொண்டு பல புதிய எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் பஸ்சை தயாரிக்கும் திட்டத்துடன் களமிறங்கியிருக்கிறது பஸ் பாடி பில்டிங் துறையில் பெயர் பெற்ற ஜேபிஎம் நிறுவனம். மேலும், ஐரோப்பாவை சேர்ந்த சோலரிஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்த நவீன மின்சார பஸ்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது.

கூட்டணி
எலக்ட்ரிக் பஸ்களை தயாரிப்பதற்காக ஜேபிஎம் மற்றும் சோலரிஸ் நிறுவனங்களிடையே கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. பேட்டரியில் இயங்கும் பஸ்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை சோலரிஸ் வழங்கும். பஸ்களை வடிவமைத்து உற்பத்தி செய்யும் பொறுப்பை ஜேபிஎம் நிறுவனம் மேற்கொள்ளும்.

முதலீடு
உத்தரபிரதேசத்தில் உள்ள கோசி என்ற இடத்தில் பஸ் தயாரிக்கும் ஆலையை நிறுவுவதற்கு இந்த கூட்டணி திட்டமிட்டிருக்கிறது. இதற்காக, ரூ.300 கோடி முதலீடு செய்யவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

உற்பத்தி
நடப்பு நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில், அதாவது, அடுத்த ஆண்டு துவக்கத்தில் பஸ் தயாரிப்பை துவங்குவதற்கு ஜேபிஎம் - சோலரிஸ் கூட்டணி முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளன.

பஸ் மாடல்
Ecolife என்ற பெயரில் இந்த புதிய மின்சார பஸ்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் கூட இந்த பஸ் மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ரேஞ்ச்
இதுவரை பேட்டரி மற்றும் டீசல் எஞ்சின் என இரட்டை எரிபொருள் கொண்ட பஸ் மாடல்கள்தான் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், முதல்முறையாக முழுவதும் பேட்டரியில் இயங்கும் முழுமையான மின்சார பஸ் மாடலாக ஈக்கோலைஃப் களமிறங்க இருக்கிறது. இந்த பஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ தூரம் பயணிக்கும்.

இரண்டு மாடல்கள்
முதல் கட்டமாக இரண்டு மாடல்களில் ஈக்கோலைஃப் மின்சார பஸ்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஒன்று 9 மீட்டர் நீளமும், 4,430மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும், மற்றொன்று 12 மீட்டர் நீளமும் 6,320மிமீ வீல் பேஸ் கொண்டதாகவும் இருக்கும்.

சிட்டி பஸ்
நகர்ப்புறங்களில் இயக்குவதற்கான சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். இந்த பஸ்களில் வீல் சேரை எளிதாக ஏற்றுவதற்கான மேடை மற்றும் இடவசதி, சொகுசான இருக்கைகள் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு கொண்டதாக இருக்கும்.

சிறப்பம்சங்கள்
இபிடி தொழில்நுட்பத்துடன் இணைந்து செயலாற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், அவசர கால வழிகள், மோனோகாக் சேஸீ போன்ற பல பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது. துருப்பிடிக்காத சேஸீ அமைப்பும் நீடித்த உழைப்பை வழங்குமாம்.

எரிபொருள் மிச்சம்
இந்த மின்சார பஸ்கள் மிக குறைவான பராமரிப்பு செலவு கொண்டதாக இருக்கும். மேலும், 10 ஆண்டு கால அளவில் 4.20 லட்சம் லிட்டர் டீசலை சேமிக்கும் என்பதோடு, 1150 டன் கார்பன் டை ஆக்சைடு புகை வெளிப்படுத்துவதையும் தவிர்க்கும்.


Click it and Unblock the Notifications








