நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவு!
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடுமுழுவதும் நெடுஞ்சாலைகளில் வாகன விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதும் விபத்துக்களுக்கான முக்கிய காரணமாக அமைந்து வருகிறது.
இந்த நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் விதமாக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நாடுமுழுவதும் தினசரி சராசரியாக 1,400 விபத்துக்கள் நடப்பதாகவும், 400 பேர் வரை உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாலேயே நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான சந்திரசூட் மற்றும் நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.

இந்த மனுவின் மீதான விசாரணை முடிவில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது. வரும் மார்ச் மாதத்திற்கு பின்னர் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளின் உரிமத்தை புதுப்பிக்கக் கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது. நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் அனைத்து மதுக்கடைகளும் அகற்றப்பட வேண்டும்.

மதுக்கடைகள் இருப்பதை தெரிவிக்கும் வகையிலான விளம்பர தட்டிகள் உள்ளிட்ட எந்தவொரு விஷயமும் நெடுஞ்சாலைகளில் வைக்கவும் கூடாது, கண்ணில் தென்படக்கூடாது என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைவர்களை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் 300 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 2,000 மதுக்கடைகள் வரை அகற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








