15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு தடை... ஹரியானா அரசு அதிரடி...
பருவ நிலை மாற்றம் என்ற வார்த்தையை அடிக்கடி செய்திகளிலும், ஊடகங்களிலும் நாம் பார்த்திருக்கிறோம். ஏதோ ஒரு சுற்றுச்சூழல் தொடர்பான விஷயம் என்று நம்மில் பலரும் அதில் அதிக அக்கறை காட்டுவதில்லை.
சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து, நகரத்தையே புரட்டிப் போட்டதற்குக் காரணம் இந்த பருவ நிலை மாற்றம்தான். உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், ஆந்திரம் என பெரும்பாலான மாநிலங்களில் ஒன்று மழை பொய்க்கிறது... இல்லையேல் அடித்து நொறுக்கி சூரையாடுகிறது.

காற்று மாசடைவதும், புவி வெப்பமயமாதலுமே இத்தகைய இயற்கைச் சீற்றங்களுக்குக் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிஓகள். சர்வதேச அளவில் மாசடைந்த நகரங்களைப் பட்டியலிட்ட போது, அதில் தில்லி 11-ஆவது இடத்தில் இருந்தது. இதையடுத்து, புகையை உமிழும் பழைய வாகனங்கள் தில்லிக்குள் செல்ல பல கட்டுப்பாடுகளை விதித்தது அந்த மாநில அரசு.
இந்த நிலையில் ஹரியாணா மாநில அரசும் அது போன்றதொரு அதிரடி அறிவிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும் தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளது ஹரியானா அரசு.
பெருகி வரும் காற்று மாசால் நகரமே நச்சுக் காடாய் மாறி வருவதன் விளைவாகவே, இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குருகிராம், ஃபரீதாபாத், சோனாபேட், ஜஜ்ஜார் உள்ளிட்ட பகுதிகளில் இந்தச் சட்டத்தை அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது ஹரியாணா மாநில போக்குவரத்துத் துறை.
அந்த நான்கு நகரங்களில் மட்டும் சுமார் 20 லட்சம் வாகனங்கள் உள்ளன. அவற்றில் 15 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்கு முந்தைய டீசல் வாகனங்களும் இனி கொசு மருந்து வண்டி போல புகையைப் பரப்பிக் கொண்டு நகருக்குள் வலம் வர முடியாது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஹரியாணா மாநில சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிருஷண் லால் பன்வார், பழைய வாகனங்களைத் தடை செய்யும் செய்யும் நடைமுறையை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தில்லியைத் தொடர்ந்து, ஹரியாணா மாநிலம் எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கதுதான். தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களிலும் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications








