சென்னையில் உள்ள ரெனோ - நிஸான் கார் ஆலையில், உற்பத்தியை கூட்ட முயற்சி
ரெனோ நிறுவனம், தங்கள் தயாரிப்புகளின் உற்பத்தியை கூட்டவும், காத்திருப்பு காலத்தை குறைக்கவும் புதிய யுக்தியை கையாள உள்ளது.
ரெனோ - நிஸான் நிறுவனங்களின் கூட்டணியில், கார் உற்பத்தி ஆலை ஒன்று சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களுக்கான உற்பத்திக்கான தேவைகளில் பெரும் பங்கு, இங்கிருந்து தான் பூர்த்தி செய்யபடுகிறது.
ஈடி ஆட்டோ தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்த ஆலையில் உற்பத்தியை கூட்ட ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரு கூடுதல் ஷிஃப்ட் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலையில், 2 ஷிஃப்ட்களில் மட்டுமே உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 ஷிஃப்ட்களில், ஒரு நாளில் சுமார் 1,000 கார்கள் தயாரிக்கபட்டு வெளியாகிறது.
3-வது ஷிஃப்ட்டில் பணிகள் மேற்கொள்ளபடும் போது, கூடுதலாக 600 கார்கள் தயாரிக்கபடலாம் என இந்த ரெனோ - நிஸான் நிறுவனங்களின் கூட்டணி நம்புகிறது. இதற்கென பிரத்யேகமாக 450 பேர் தேர்வு செய்யபட்டு, கூடுதலாக புதிய 450 பணியிடங்களும் உருவாக்கபடுகிறது.
3-வது ஷிஃப்ட்டில் மேற்கொள்ளபட உள்ள இந்த கூடுதல் உற்பத்தி நடவடிக்கை, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கபட்டுள்ளது.

இப்படி கூடுதலாக மேற்கொள்ளபடும் உற்பத்தி நடவடிக்கை மூலம் தயாரிக்கபடும் கார்களில் அதிக எண்ணிக்கையானது ரெனோ க்விட் மாடலாக தான் இருக்கும். ரெனோ க்விட் மாடல் தான் இந்த நிறுவனம் மூலம் தயாரிக்கபடும் தயாரிப்புகளில் மிகவும் புகழ் பெற்றதாக உள்ளது. அதற்கான காத்திருப்பு காலம் தற்போது 6 மாதங்களாக உள்ளது.
3-வது ஷிஃப்டில் பணிகள் மேற்கொள்ளபட்டு உற்பத்தி கூட்டபடுவதன் மூலம், ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10,000 ரெனோ க்விட் கார்கள் தயாரிக்கபடலாம் என தெரிகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த கூட்டபட்ட உற்பத்தி மூலம் ரெனோ க்விட் காரின் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என ரெனோ க்விட் பிரியர்கள் நம்பலாம்.
ரெனோ க்விட் மாடல் கார் விரும்பிகளுக்கு இது கட்டாயம் இனிமையான செய்தியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








