ஆட்டோமேடிக் கியர் உற்பத்தி நிறுவனம் மேக்னெட்டி மெரேல்லியை கைப்பற்றுகிறதா சாம்சங்?
எலெக்ட்ரானிக் சந்தையில் மாஸ் காட்டி வரும் சாம்சங் நிறுவனம் ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் முழு வீச்சில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளது. அதற்காக காம்பேக்ட் எஸ்யூவியோ, செடான் மாடலோ சாம்சங் பெயரில் சாலைகளில் செல்லும் என நினைக்காதீர்கள்.
கார்களுக்குள் பயன்படுத்தப்படும் ஆட்டோ மேடிக் கியர், இன்ஃபோடெயின்மெண்ட் உள்ளிட்ட சாதனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான மேக்னெட்டி மெரேல்லியை மொத்தமாக வாங்கப் போகிறதாம் சாம்சங்.

ஃபியட் கிரிஸ்லெர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் கிளை கம்பெனிதான் இந்த மேக்னெட்டி மெரேல்லி. சமீப காலமாக ஃபியட் கிரிஸ்லெர் நிறுவனத்தின் நிதி நிலைமை அவ்வளவு சரியாக இல்லை. கடந்த நிதியாண்டுக்கான வரவு - செலவு அறிக்கையில் நஷ்டத்தை கணக்காகக் காட்டியுள்ளது இந்நிறுவனம்.
இத்தகைய சோதனைக் கட்டத்தில் ஃபியட் கிரிஸ்லெர் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் சிக்கியுள்ள நிலையில்தான் சாம்சங் நிறுவனம் மேக்னெட்டி மெரேல்லி நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது.
இதற்காக 3 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் இரு தரப்பிலும் பேசி முடிவாகி விட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் ஃபியட் கிரிஸ்லெர் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 9 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங்கின் கட்டுப்பாட்டில் மேக்னெட்டி மெரேல்லி நிறுவனம் வந்தால், அதன் விற்பனை அதிகரிக்கும் எனவும் ஆட்டோ மொபைல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம், கார்களின் விளக்குகள், உள்புற சவுண்ட் சிஸ்டம், நேவிகேசன் சிஸ்டம், டெலி மேட்ரிக்ஸ் உள்ளிட்ட அம்சங்களைத் தனது நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கும் பொருட்டு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஏற்கெனவே எலெக்ட்ரானிக் துறையில் மார்க்கெட் லீடராக விளங்கும் சாம்சங் நிறுவனம், அதே செக்மெண்டில் கார்களுக்குத் தேவையான வேறு சில பொருள்களை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்தால், அந்த முயற்சி பெறும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், கார் இண்டீரியர் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஏற்கெனவே கோலோச்சிக் கொண்டிருக்கும் பிற நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சாம்சங் முன்னேறுவதற்கு கடுமையான முயற்சி தேவை.


Click it and Unblock the Notifications








