புதிய தானியங்கி பறக்கும் கார்: டெர்ராஃபியூஜியாவின் அடுத்த அசத்தல்!
ஓட்டுனர் இல்லாமல் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் புதிய தானியங்கி பறக்கும் கார் தயாரிப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக டெர்ராஃபியூஜியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் முதல் பறக்கும் காரை தயாரித்து பெருமை பெற்ற அமெரிக்காவை சேர்ந்த டெர்ராஃபியூஜியா, அடுத்ததாக தானியங்கி பறக்கும் காரையும் கிட்டத்தட்ட உருவாக்கிவிட்டது. யாருடைய தயவும் இன்றி பயணிகளையும், உரிமையாளர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வரும் இந்த பறக்கும் கார் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

மாடல்
டெர்ராஃபியூஜியா அறிமுகம் செய்த உலகின் முதல் பறக்கும் கார் மாடல் டிரான்ஸ்சிஷன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தற்போது உருவாக்கப்பட்டு வரும் தானியங்கி பறக்கும் காரை TF-X என்ற பெயரில் அழைக்கிறது.

ஹைபிரிட் மாடல்
புதிய தானியங்கி பறக்கும் கார் ஹைபிரிட் எரிபொருள் ஆப்ஷனில் வருவதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஆம், பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டாரில் இயங்கும் வகையில் இரட்டை எரிசக்தி நுட்பத்தில் தயாராகிறது. இதன்மூலமாக, கூடுதல் தூரம் பயணிக்கும் திறனையும், குறைவான மாசு வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

எஞ்சின்
டெர்ராஃபியூஜியா டிஎஃப்-எக்ஸ் பறக்கும் காரில் 300 குதிரைசக்தி திறனை வெளிப்படுத்தும் எஞ்சின் இருக்கும். மேலும், பறக்கும் போது இந்த எஞ்சின் மூலமாக பேட்டரிகள் சார்ஜ் ஆகும் தொழில்நுட்பத்தையும் பெற்றிருக்கும்.

ரேஞ்ச்
ஒருமுறை முழுமையாக எரிபொருள் நிரப்பும்போது அதிகபட்சமாக 804 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன்மூலமாக, சென்னையிலிருந்து, பெங்களூர் போன்று அருகாமையில் உள்ள நகரங்களுக்கு தொழில் மற்றும் அலுவலக விஷயமாக செல்வோர்க்கு மிகுந்த பலனளிக்கும்.

வேகம்
இந்த புதிய தானியங்கி கார் மணிக்கு 321 கிமீ வேகம் வரை பறக்கும். இதனால், நகரங்களுக்கு இடையில் செல்வதற்கு மிக விரைவான போக்குவரத்து சாதனமாகவும் இருக்கும்.

கிராஷ் டெஸ்ட்
டெர்ராஃபியூஜியா டிஎஃப்- எக்ஸ் தானியங்கி பறக்கும் காரின் சிறப்பம்சங்கள் மற்றும் கட்டமைப்பு மிகச்சிறப்பானதாக இருக்கும். அதேநேரத்தில், கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் மற்றும் குட்டி விமான வடிவமைப்புக்கான அம்சங்களுடன் இதனை உருவாக்குவதில் பல சவால்களை முறியடித்து இந்த காரை உருவாக்கி வருகின்றனர்.

புரோட்டோடைப்
வரும் 2018ம் ஆண்டில் முதல் புரோட்டோடைப் கார் தயாராகிவிடும். அதனைத்தொடர்ந்து, இந்த பறக்கும் காரை சோதனை செய்யும் முயற்சிகள் தொடங்கும்.

விற்பனை?
தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டினாலும், வர்த்தக ரீதியில் இந்த புதிய தானியங்கி பறக்கும் கார் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் 10 முதல் 12 ஆண்டுகள் ஆகுமாம். எனவே, 2028ம் ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வந்துவிடுமாம்.

சிறப்பு
கார் மற்றும் விமானங்களை ஓட்டத் தெரியாதவர்களும், பைலட் லைசென்ஸ் இல்லாதவர்களும் கூட இந்த பறக்கும் காரில் பயணிக்க முடியும். இதனால், ஆண்களைவிட பெண்கள், வயதானவர்களுக்கு இந்த பறக்கும் கார் மிகுந்த பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தித் தொகுப்பு
அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் புதிய பறக்கும் கார் பற்றிய தகவல்கள்!


Click it and Unblock the Notifications








