சுஸுகியின் குஜராத் கார் ஆலையில் 2017-ல் உற்பத்தி துவக்கம்
சுஸுகி நிறுவனத்திற்கு முழுக்க முழுக்க சொந்தமான கார் உற்பத்தி ஆலை குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. 2017 முதல் இந்நிறுவனத்தின் குஜராத் கார் உற்பத்தி ஆலையில் இருந்து உற்பத்தி துவங்கும் என உறுதி செய்யபட்டுள்ளது.
சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன், இதர பங்குதாரர்கள் இந்த தகவலை உறுதி செய்தனர்.

இந்த குஜராத் கார் உற்பத்தி ஆலையானது, மாருதி சுஸுகி நிறுவனத்தின் உதவில்லாமல் ஸ்தாபிக்கப்படுகிறது. ஆனால், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் இந்த சுஸுகி நிறுவனம், பிரத்யேகமாக மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு வாகனங்களையும், வாகன கூறுகளையும் வழங்கும். இந்த உற்பத்தி ஆலையை ஸ்தாபிக்க சுமார் 18,500 கோடி ரூபாய் முதலீடு செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது.
இது தொடர்பாக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் சுஸுகி மோட்டார் கார்ப் சேர்மேன் ஒசாமு சுஸுகி இடையே பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.
இதையடுத்து, "நாங்கள் திட்டமிட்ட படி, குஜராத் உற்பத்தி ஆலையில், 2017 முதல் உற்பத்தி நடவடிக்கைகள் துவங்கும்" என ஒசாமு சுஸுகி தெரிவித்தார்.
2017-ல் குஜராத் ஆலையில் உற்பத்தி துவங்கும் நிலையில், சுஸுகி நிறுவனம் மூலம் ஒரு வருடத்திற்கு சுமார் 2,50,000 கார்கள் தயாரிக்கபட்டு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்திய கார் சந்தைகளை சுமார் பாதிக்கு மேல் கட்டுபடுத்தும் மாருதி சுஸுகி நிறுவனத்தில், தற்போதைய நிலையில் சுஸுகி நிறுவனம் 56% பங்குகளை தங்கள் வசம் கொண்டுள்ளது.
தற்போதைக்கு, ஒரு வருடத்திற்கு, 1.4 மில்லியன் கார்கள் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் இந்த கார் சுஸுகி நிறுவனம், 2022-ஆம் ஆண்டிற்குள் இந்த உற்பத்தியை, ஒரு வருடத்திற்கு 2 மில்லியன் கார்கள் என்ற அளவிற்கு உயர்த்திவிடும் என எதிர்பார்க்கபடுகிறது.


Click it and Unblock the Notifications








