அலர்ட்: ஜனவரி முதல் டாடா கார்களின் விலை உயர்கிறது!
ஜனவரி முதல் டாடா கார்களின் விலை உயர்த்தப்பட உள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் படிக்கலாம்.
டாடா டியாகோ கார் கொடுத்த உற்சாகத்தில் முதல் ஆளாக விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
வரும் ஜனவரி 1ந் தேதி முதல் அனைத்து கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக அந்த நிறுவனம் வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாடலுக்கு தக்கவாறு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை கார்கள் விலை உயர்த்தப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது. இது புத்தாண்டில் கார் வாங்க திட்டமிட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் தலைவர் மாயன் பரீக் கூறுகையில்," கார் தயாரிப்புக்கு தேவையான உலோகங்கள், ரப்பர் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதையடுத்து, கார் விலையை உயர்த்தும் நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது.

எங்களது கார்களுக்கு மார்க்கெட்டில் நல்ல டிமான்ட் இருக்கிறது. குறிப்பாக, டியாகோ காருக்கான டிமான்ட் மாதத்துக்கு மாதம் அதிகரித்து வருகிறது. அடுத்ததாக ஜனவரி மாதத்தில் ஹெக்ஸா காரை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்," என்று மாயன் பரீக் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு துவங்கும்போது கார் விலைகளை உயர்த்துவது கார் நிறுவனங்களின் வாடிக்கையான நடவடிக்கைதான். விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள்தான் எப்போதும் கார் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடுவது வழக்கம்.

ஆனால், இந்த முறை டாடா மோட்டார்ஸ் முதல் ஆளாக விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து இதர கார் நிறுவனங்களும் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








