கிராஷ் டெஸ்ட்டில் அசத்திய டாடா ஸெஸ்ட் கார்... புகழ்ந்து தள்ளிய குளோபல் என்சிஏபி அமைப்பு!
குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் டாடா ஸெஸ்ட் கார் சிறப்பான தர மதிப்பீட்டை பெற்று அசத்தியிருக்கிறது. டாடா ஸெஸ்ட் காரை குளோபல் என்சிஏபி அமைப்பும் புகழ்ந்து தள்ளியிருக்கிறது.
கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனையாகும் கார் மாடல்களை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் சோதனை நடத்தியது. அதில், பல முன்னணி கார் மாடல்கள் பூஜ்ய தர மதிப்பீட்டை பெற்று அதிர்ச்சி கொடுத்தன.
இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான கார் மாடல்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குளோபல் என்சிஏபி அமைப்பு எச்சரித்தது. சில கார் மாடல்களை திரும்ப பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் மானம் கப்பலேறியது.

இந்த நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட டாடா ஸெஸ்ட் காரை சமீபத்தில் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது. அதில், சிறப்பான தர மதிப்பீட்டை பெற்று இந்தியர்களின் மானத்தை காப்பாற்றியிருக்கிறது.

டாடா ஸெஸ்ட் காரின் இரண்டு மாடல்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. முதலில் ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத பேஸிக் மாடல் டெஸ்ட் செய்யப்பட்டது. ஆனால், அந்த மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் பூஜ்ய தர மதிப்பீட்டையும், சிறியவர்களுக்கான தர மதிப்பீட்டில் ஒற்றை நட்சத்திரத்தை மட்டுமே பெற்றது.

இந்த நிலையில், பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட மாடலை தயாரித்து தந்தால், அதனை சோதனை செய்து தருவதாக குளோபல் என்சிஏபி அமைப்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்கியது.

தனை ஏற்றுக் கொண்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு கொண்ட புதிய ஸெஸ்ட் மாடலை குளோபல் என்சிஏபி அமைப்பிடம் வழங்கியது. மேலும், அந்த புதிய ஸெஸ்ட் காரில் டயூவல் ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டன.

இந்த நிலையில், அந்த புதிய மாடலை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட் செய்து முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அதில், ஸெஸ்ட் கார் 5க்கு 4 என்ற தர மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது டாடா ஸெஸ்ட் கார்.

இந்தியாவில் விற்பனையாகும் பல வெளிநாட்டு நிறுவனங்களின் கார் மாடல்களே பூஜ்ய மதிப்பீட்டை பெற்ற நிலையில், டாடா ஸெஸ்ட் சிறப்பான தர மதிப்பீட்டை பெற்றிருப்பது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.

குறிப்பாக, பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் பல கார் மாடல்கள் சொதப்பி வந்தன. ஆனால், டாடா ஸெஸ்ட் கார் 5க்கு 4 என்ற தர மதிப்பீட்டை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கான தர மதிப்பீட்டில் 2 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றிருக்கிறது.

இதுகுறித்து குளோபல் என்சிஏபி அமைப்பின் பொது செயலர் டேவிட் வார்டு குறிப்பிடுகையில்," நம்ப முடியாத வகையில் ஸெஸ்ட் காரின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு பாதுகாப்பு அம்சத்தை சிறப்பாக மேம்படுத்தியிருப்பதன் மூலம் நல்ல அறிகுறியாகவே பார்ப்பதாக என்று அவர் கூறினார்.

டாடா ஸெஸ்ட் காரின் 4 நட்சத்திர தர மதிப்பீடு பெற்ற கார் மாடலை இந்தியர்கள் தேர்வு செய்வதற்கு சிபாரிசு செய்வதாகவும் அவர் கூறினார். மேலும், பேஸ் மாடலிலும் டியூவல் ஏர்பேக்கை நிரந்தர ஆக்சஸெரீயாக வழங்குவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் டேவிட் கூறியிருக்கிறார்.

சாலை போக்குவரத்து கல்வி நிறுவனத்தின் தலைவர் ரோஹிஸ் பலூஜா கூறுகையில்," பூஜ்ய மதிப்பீட்டை பெற்ற டாடா ஸெஸ்ட் காரின் கட்டுமானத்தை டாடா மோட்டார்ஸ் சிறப்பாக மேம்படுத்தி 4 நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

கட்டுமான தரம், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல், கார்கள் விபத்தில் சிக்குவதை தவிர்ப்பதற்கான பாதுகாப்பு வசதிகளையும் சேர்ப்பது அவசியம் என்று ரோஹித் பலூஜா வலியுறுத்தியுள்ளார். மேலும், மோதலின்போது பயணிகளை பாதுகாக்கும் அம்சங்களுடன் கார்களை தயாரிப்பது அவசியம் என்றும் கூறியிருக்கிறார்.

கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஸெஸ்ட் காரில் இருப்பதுபோன்றே, ஸெஸ்ட் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் மேம்படுத்தப்பட்ட கட்டுமானத் தரம் கொண்டதாக அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








