மின்னணு மயமாகும் சுங்கச் சாவடிகள்... க்யூவில் நிற்க வேண்டாம்!
நாடுமுழுவதும் உள்ள விரைவு சாலைகளில் மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் பிடித்தம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் கார்களை ஓட்டிச் செல்வது சுகானுபவமாக இருக்கும். ஆனால், இந்த சுங்கச் சாவடிகள் குறுக்கிடும்போதுதான் தொல்லை ஆரம்பமாகும்.
பணம் செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருப்பதால், பயண நேரம் வெகுவாக அதிகரிப்பதுடன் எரிபொருள் விரயமும் ஏற்படுகின்றது. இந்த நிலையை போக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.

அதன்படி, நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை மின்னணு மயமாக்கும் திட்டம் கையில் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, கார் சுங்கச் சாவடியை கடக்கும்போதே, லேசர் தொழில்நுட்பம் மூலமாக, வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மின்னணு அட்டையின் மூலமாக வாகனத்தை அடையாளம் கண்டுகொள்ளும்.

அதன் அடிப்படையில், அந்த வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கு அல்லது சிறப்புக் கணக்கிலிருந்து கட்டணம் நேரடியாக முறையில் எடுத்துக்கொள்ளப்படும். இது தொழில்நுட்பமானது தானியங்கி முறையில் செயல்படும்.

இதனால், சுங்கச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தி பணம் செலுத்த வேண்டியதற்கான அவசியம் ஏற்படாது. க்யூவில் நிற்க வேண்டிய அவசியமும், எரிபொருள் விரயமும் தவிர்க்கப்படும்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பான் இன்டர்நேஷனல் கோஆபரேஷன் ஏஜென்சி என்ற நிறுவனமும் இந்த திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஆதாரத்தை வழங்க உள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் சாலைகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லி அருகே இருக்கும் கிழக்கு விரைவு சாலையில் முதன்முதலாக இந்த வசதி அறிமுகப்படுத்த உள்ளது. விரைவு சாலைகளை தவிர்த்து, நெடுஞ்சாலைகளிலும் இந்த மின்னணு தொழில்நுட்பம் மூலமாக சுங்கக் கட்டணம் செலுத்தும் வசதியை கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, வாகன உரிமையாளர்கள் சிறப்பு சுங்க கட்டண கணக்கு ஒன்றை துவங்க வேண்டியிருக்கும். அடுத்த ஆண்டு இறுதியில் இந்த வசதி பயன்பாட்டுக்கு வருகிறது.

மின்னணு முறையில் நேரடியாக சுங்கக் கட்டணம் செலுத்தும் வசதி இல்லாதவர்களுக்கு வசதியாக, தற்போது உள்ளதுபோல் பணியாளர்கள் மூலமாக கட்டணம் வசூலிப்பதற்காக ஒரு வழித்தடம் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் 8ந் தேதி 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கு பின்னர், பண பரிவர்த்தனைகளை மின்னணு முறையில் செய்திடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








