1.4 லிட்டர் எஞ்சின்களை இந்தியாவிலேயே தயாரிக்கிறது டொயோட்டா நிறுவனம்...
மஜித் மஜிதி என்ற இரானிய இயக்குநரைப் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும். சில்ட்ரன் ஆஃப் ஹெவன், தி ஃபாதர், கலர் ஆஃப் பேரடைஸ் உள்ளிட்ட ஆகச் சிறந்த திரைப்படங்களை இயக்கியவர் அவர். இரானி மொழிப் படங்களைப் பொருத்தவரை, நம்ம ஊர் திரைப்படங்கள் போல குத்துப்பாட்டு, கிளப் டான்ஸ் எல்லாம் வைக்க முடியாது.
சொல்லப்போனால், கிட்டத்தட்ட கலைப் படங்களின் வடிவங்களாகவே இரானிய திரைப்படங்கள் உள்ளன. அந்த அளவுக்கு அங்கு சென்சார் போர்டு செம கெடுபிடி. ஆனால் அதற்கெல்லாம் அசராமல், குழந்தைகளை மையக் கதாபாத்திரங்களாக வைத்து மஜித் மஜிதி பல படங்களை எடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார்.
எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அதன் எல்லைக்குள் ஸ்மார்ட்டாக பணியாற்றும் மக்கள் ஏராளமாக உள்ளனர். இதேபோல பல்வேறு துறைகளிலும் கட்டுப்பாடுகளுக்கு நடுவில் பணியாற்றி பெயர் எடுத்த சான்றுகள் நம் முன்னே உள்ளன. ஆட்டோ மொபைல் துறையும் அதற்கு விதி விலக்கல்ல. அந்த வரிசையில் டொயோட்டா நிறுவனமும் ஒரு முயற்சியை செய்து பார்க்க திட்டமிட்டுள்ளது.

அது என்ன தெரியுமா?.. 2.0 லிட்டர் திறனுக்கு அதிகமான டீசல் எஞ்சின் வாகனங்களுக்கு தில்லி அரசு தடை போட்டுள்ளதைத் தொடர்ந்து, ஜப்பானின் டொயோட்டா நிறுவனம் 1.4 லிட்டர் திறன் கொண்ட எஞ்சின்களை இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
அதாவது, 2.4 மற்றும் 2.8 லிட்டர் திறன் கொண்ட எஞ்சின்கள் மட்டுமே கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள டொயோட்டா தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது.
இன்னோவா கிரிஸ்டா மாடல்களுக்கு அந்த எஞ்சின் பொருத்தப்படுகிறது. எட்டியோஸ், எட்டியோஸ் கிராஸ், எட்டியோஸ் லிவா, கொரால்லா ஆல்டிஸ் உள்ளிட்ட மாடல்களுக்குப் பொருத்தப்படும் 1.4 லிட்டர் திறன் கொண்ட எஞ்சின்கள் ஜப்பானில் இருந்துதான் இதுவரை இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், அந்தத் திறன் எஞ்சின்களை இந்தியாவில் தயாரிக்க டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் எட்டியோஸ் மாடல்களின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தில்லியில் டீசல் எஞ்சின் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே, டொயோட்டா நிறுவனத்தின் இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விரைவில் அறிமுகமாகவுள்ள மேம்படுத்தப்பட்ட எட்டியோஸ் மாடலில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எஞ்சின்கள் பொருத்தப்பட உள்ளன.
டொயோட்டா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் இத்தகைய முடிவுகள், பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு வலு சேர்க்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








