'சரக்கு' டெலிவிரி செய்த உலகின் முதல் டிரைவரில்லாமல் இயங்கும் டிரக்!
அமெரிக்காவில், டிரைவரில்லாமல் இயங்கும் டிரக் ஒன்று சரக்குகளை வெற்றிகரமாக டெலிவிரி செய்துள்ளது. இது சரக்கு போக்குவரத்தில் புதிய அத்தியாயத்தை துவங்கியிருக்கிறது.
அமெரிக்காவில், டிரைவரில்லாமல் இயங்கும் டிரக் ஒன்று சரக்குகளை வெற்றிகரமாக டெலிவிரி செய்துள்ளது. இது சரக்கு போக்குவரத்தில் புதிய அத்தியாயத்தை துவங்கியிருக்கிறது.
உலகிலேயே சரக்குகள் பயன்பாட்டில் டிரைவரில்லாமல் இயங்கும் டிரக் பயன்படுத்தப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை. இதுபற்றிய கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் டிரைவரில்லாமல் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் Otto என்ற நிறுவனத்தை உபேர் டாக்சி நிறுவனம் வாங்கியது. உபேர் கீழ் செயல்படும் ஓட்டோ நிறுவனம் உருவாக்கிய டிரைவரில்லாமல் இயங்கும் டிரக்தான் தற்போது சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பட்வைசர் மதுபான தயாரிப்பு நிறுவனத்திலிருந்து 50,000 பீர் கேன்களை இந்த டிரக் சுமந்து சென்று உரிய இடத்தில் கொண்டு சேர்த்தது.

கொலராடோவின் லவ்லேண்ட் பகுதியிலுள்ள பட்வைசர் ஆலையிலிருந்து, கொலராடோ ஸ்பிரிங்ஸ் என்ற பகுதிக்கு அந்த டிரக் பீர் கேன்களை ஏற்றிச் சென்றது.

ஆலையிலிருந்து நெடுஞ்சாலையை தொடும் வரை டிரைவர் இந்த டிரக்கை ஓட்டி வந்தார். நெடுஞ்சாலையை தொட்டதுமே ஓட்டுனர் இருக்கையிலிருந்து எழுந்து பின்பக்க இருக்கையில் அமர்ந்து விட்டார் அவர்.

அதன்பிறகு கிட்டத்தட்ட 161 கிமீ தூரம் ஓட்டுனரின் கட்டுப்பாடு ஏதுமில்லாமல் சுயமாக பயணித்தது அந்த டிரக். சராசரியாக மணிக்கு 88.5 கிமீ வேகத்தில் அந்த டிரக் பயணித்தது.

கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரத்தை தொட்டவுடன் மீண்டும் டிரக்கை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டிருக்கிறார் டிரைவர். கடந்த 20ந் தேதி இந்த புதிய சாதனை படைக்கப்பட்டது.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு, இந்த டிரக்கை கொலராடோ நெடுஞ்சாலை ரோந்து வாகனம் பின்தொடர்ந்து வந்தது. கிட்டத்தட்ட 193 கிமீ தூரம் அந்த டிரக் பயணித்து உரிய இடத்தில் பீர் கேன்களை கொண்டு சேர்த்தது.

வணிக போக்குவரத்தில் இந்த புதிய தானியங்கி டிரக் புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. எதிர்காலத்தில் டிரைவர் பற்றாக்குறை மற்றும் மனித தவறுகளால் ஏற்படும் விபத்துக்கள் இதுபோன்ற தானியங்கி டிரக்குகள் மூலமாக தவிர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








