குறைபாடுடைய கார் டெலிவிரி: ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கு அபராதம்
குறைபாடுடைய கார் டெலிவிரி கொடுக்கப்பட்டதற்காக ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கும், அதன் டீலருக்கும் சென்னை நுகர்வோர் குறைதீர் மன்றம் அபாரதம் விதித்துள்ளது.
குறைபாடுடைய கார் டெலிவிரி கொடுக்கப்பட்டதற்காக ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கும், அதன் டீலருக்கும் சென்னை நுகர்வோர் குறைதீர் மன்றம் அபாரதம் விதித்துள்ளது.
சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய வட சென்னை நுகர்வோர் குறைதீர் மன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

சென்னை, சின்மயா நகரை சேர்ந்தவர் எஸ்ஜி ரமேஷ் குமார். கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 19ந் தேதி சென்னையிலுள்ள ஃபோக்ஸ்வேகன் டீலரான அப்ரா மோட்டார்ஸ் ஷோரூமிலிருந்து ஃபோக்ஸ்வேன் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.

கார் வாங்கப்பட்டு 8 மாதங்கள் ஆன நிலையில், காரின் எஞ்சினிலிருந்து ஆயில் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, அப்ரா மோட்டார்ஸ் சர்வீஸ் சென்டருக்க எடுத்துச் சென்றுள்ளார். எஞ்சினை ஆய்வு செய்த சர்வீஸ் எஞ்சினியர், ஆயில் சம்ப் தெறிப்பு விழுந்து இருப்பதாகவும், எனவே, புதிய எஞ்சின்தான் பொருத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, இன்ஸ்யூரன்ஸ் மூலமாக க்ளெயிம் செய்ய விண்ணப்பித்துள்ளார் ரமேஷ் குமார். ஆனால், காரை ஆய்வு செய்த இன்ஸ்யூரன்ஸ் நிறுவன சர்வேயர், இழப்பீடு வழங்குவதற்கு பரிந்துரைக்கவில்லை. மேலும், இழப்பீடு கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வீஸ் மையத்தில் புதிய எஞ்சின் மாற்றுவதற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும், அதில் 50 சதவீத செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குமாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், காரை தாறுமாறாக ஓட்டியபோது பாறாங்கல்லில் மோதி தெறிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த ரமேஷ் குமார் வடசென்னை மாவட்ட குறைதீர் மன்றத்தில் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், ஃபோக்ஸ்வேகன் இந்தியா விற்பனைப் பிரிவு மற்றும் அப்ரா மோட்டார்ஸ் நிறுவனங்கள் மீது புகார் அளித்துள்ளார்.

தனது புகாருக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றும், இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வடசென்னை மாவட்ட குறைதீர் மன்றம் விசாரணை நடத்தியது.

அதில், கார் பாறாங்கல்லில் மோதியதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து, வாடிக்கையாளர் குமாருக்கு சரியான தீர்வு வழங்காமல், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதமும், ரூ.5,000 வழக்குச் செலவாகவும் அளிக்க உத்தரவிட்டது.

மேலும், அந்த காருக்கு கட்டணமில்லாமல் புதிய எஞ்சின் பொருத்தி தரவும் ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்துக்கு வட சென்னை நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








