சொகுசு கார் நிறுவனங்களுக்குள் என்ன தான் நடக்கிறது..? சொந்த நாட்டிலேயே சூனியம் தேடிக்கொண்ட ஆடி...!!
ஆடி மீது பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பிய ஜெர்மன் அரசு. விவரங்கள் இனி...
வோக்ஸ்வேகன் நிறுவனத்தை சேர்ந்த ஆடி நிறுவனம் தனது இரண்டு சொகுசுக் கார்களின் மாடலில் மாசு உமிழ்வு மோசடி செய்துள்ளதாக ஜெர்மன் நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

2015ல் வோக்ஸ்வேகன் நிறுவனம் மாசு உமிழ்வு மோசடியில் ஈடுபட்டதை அமெரிக்க கண்டுபிடித்ததை அடுத்து அந்நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு பல பில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
அத்தோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாக நினைத்த வேளையில் டீசல்கேட் முறைகேடு மீண்டும் அமெரிக்காவில் தலைதூக்கியது. இம்முறை அதற்கு பிள்ளையார் சூழி போட்டது ஆடி.
அங்கு சுத்தி, இங்கு சுத்தி தற்போது ஆடியின் தாய் நாடான ஜெர்மனியையே அந்நிறுவனம் பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்ததை ஜெர்மனியின் போக்குவரத்து துறை அமைச்சர் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்.

ஜெர்மன் நாட்டின் சுற்றுச்சூழல் விதிகளை மதிக்காமல், அதை மீறி ஆடி நிறுவனம் சில ஆடம்பர மாடல் கார்களை தயாரித்திருப்பதாக அந்நாட்டு அரசு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

ஆடி நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு கார்கள் ஜெர்மன் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அலெக்ஸ்சேண்டர் தாப்ரிந்த் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை ஆடி நிறுவனம் ஏ7 மற்றும் ஏ8 மாடல்களில் தயாரித்த 24,000 கார்களில் 14,000 கார்கள் ஜெர்மன் நாட்டின் சுற்றுச்சூழல் விதிகளை மீறி உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஜெர்மன் நாட்டில் விற்கப்பட்ட 14,000 ஏ7 மற்றும் ஏ8 கார்கள் விதிகளை மீறி நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை உமிழ்வதாக கூறியுள்ளார்.
இதுவே பாதிப்படைந்த கார்கள் என்றால் அவற்றிலிருந்து 15 சதவீதத்திக்கும் அதிகமாக நைட்ரஸ் ஆக்சைடு வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் எழுப்பிய குற்றச்சாட்டிற்கு பதிலளித்து பேசிய ஆடி நிறுவன அதிகாரிகள், நிலைமை மாற்றியமைப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது பாதிப்படைந்த 24,000 கார்களையும் கண்டறிந்து, கார்களில் விசையை கடத்துக்கூடிய பாகங்கள் மற்றும் எஞ்சினை கட்டுபடுத்தும் பகுதிகளில் நிலைமையை ஆராய்ந்து,
அதற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்ட மென்பொருள் வழங்கப்படும் என ஆடி நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதன்மூலம் அதிகமாக நைட்ரஸ் ஆக்சைடு வெளியேறுவது தடுக்கப்படும் என ஆடி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2015ம் ஆண்டில் உலக ஆட்டோமொபைல் துறையையே திரும்பி பார்க்கவைத்த வோக்ஸ்வேகன் மாசு உமிழ்வு மோசடி தற்போது தான் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.
பல நாடுகளில் இருக்கக்கூடிய வோக்ஸ்வேகன் டீலர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு இருந்தனர. ஆனால் அதற்குள் வோக்ஸ்வேகனை சேர்ந்த ஆடி மாசு உமிழ்வு மோசடியில் சிக்கியிருப்பது டீலர்களை கதிகலக்கியுள்ளது.

வோக்ஸ்வேகன், மாசு உமிழ்வு மோசடி செய்தத்தற்கான அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டு அந்நிறுவனம், 14.8 பில்லியன் டாலரை அமெரிக்காவிற்கு அபராதமாக வழங்குவதாக சமீபத்தில் தான் அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் தன் சொந்த நாட்டிலேயே வோக்ஸ்வேகன் நிறுவனத்தை சார்ந்த ஆடி மாசு உமிழ்வு மோசடி செய்திருப்பது உலக ஆட்டோமொபைல் அரங்கில் அந்நிறுவனத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .


Click it and Unblock the Notifications








