செவர்லே கார் விற்பனை நிறுத்தம்: உதிரிபாகங்கள் சப்ளையில் பிரச்னை வருமா?
செவர்லே கார் விற்பனை நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, உதிரிபாகங்கள் சப்ளை பற்றிய சந்தேகம் வாடிக்கையாளர்களிடம் எழுந்துள்ளது.
கடந்த 1995ம் ஆண்டு ஒபெல் கார் பிராண்டுடன் இந்தியாவில் கால் பதித்தது அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ். ஒபெல் கார் வர்த்தகம் எதிர்பார்த்த அளவு இல்லாததையடுத்து, அதற்கு முடிவு கட்டிய ஜெனரல் மோட்டார்ஸ் 2006ம் ஆண்டில் செவர்லே பிராண்டில் கார்களை அறிமுகம் செய்தது.

முந்தாநாள் வந்த கார் நிறுவனங்கள் எல்லாம் மார்க்கெட்டை நாடி பிடித்து, மார்க்கெட் பங்களிப்பை உயர்த்திக்கொண்ட நிலையில், செவர்லே பிராண்டு மட்டும் தடுமாறியது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களை கடந்தும் இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தால் பிடிக்க முடியவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே வர்த்தம் மிக மோசமாக இருந்த நிலையில், தற்போது கடும் சந்தைப் போட்டி காரணமாக செவர்லே கார்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைய துவங்கியது. மேலும், நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையும் திருப்திகரமாக இல்லாததால், வாடிக்கையாளர்களும் தவிர்க்க துவங்கினர்.

இதனால், செவர்லே கார் வர்த்தகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில், புதிய மாடல்களுடன் இந்திய மார்க்கெட்டை ஜெனரல் மோட்டார்ஸ் ஒரு கை பார்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவில் கார் விற்பனையை முற்றிலும் நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது.

இந்த முடிவு வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செவர்லே பிராண்டில் ஸ்பார்க், பீட், செயில் யுவா, செயில் செடான், தவேரா, என்ஜாய், க்ரூஸ், ட்ரெயில்பிளேசர் என பல பிரபல மாடல்கள் கையில் இருந்தும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னிலை பெற முடியவில்லை.

இந்த நிலையில், செவர்லே கார்களின் விற்பனை நிறுத்தப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறது. செவர்லே கார்களுக்கு தொடர்ந்து சர்வீஸ், ஸ்பேர் பார்ட்ஸ் உள்ளிட்டவை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

2006ம் ஆண்டு ஒபெல் கார் விற்பனை நிறுத்தப்பட்ட போதிலும், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சர்வீஸ் மையங்கள் செயல்பட்டன. உதிரிபாகங்களும் சப்ளை செய்யப்பட்டன. ஆனால், வழக்கமான அளவு அது இல்லை. மேலும், ஒபெல் கார்களின் மறு விற்பனை மதிப்பும் வெகுவாக குறைந்தது.

அதேநிலை இப்போது செவர்லே கார்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. செவர்லே பிராண்டில் க்ரூஸ், செயில் செடான், பீட் உள்ளிட்ட சிறந்த மாடல்கள் இருந்தபோதிலும், தற்போது வந்திருக்கும் இந்த செய்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் விஷயமாகவே அமைந்துவிட்டது. கார்களை சிறப்பாக பராமரிக்க அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்கள் அவசியம்.

அதேநேரத்தில், சர்வீஸ் மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும், உதிரிபாகங்களும் தொடர்ந்து சப்ளை செய்யப்படும் என்றும் செவர்லே நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும், இது எத்தனை ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

இந்த அறிவிப்பு வந்தவுடனேயே, பதட்டமடைந்து உடனே காரை விற்க முயற்சிக்க வேண்டாம். செவர்லே கார்கள் சிறந்த மாடல்களாகவே கருத முடியும். இப்போது விற்க முனைந்தால் விலை மதிப்பு குறைவாக இருக்கும். எனவே, தொடர்ந்து இயக்குவதே சிறந்ததாக இருக்கும்.

ஸ்பேர் பார்ட்ஸ் செவர்லே நிறுவனத்தால் சப்ளை செய்யப்படாவிட்டாலும், உதிரிபாக சப்ளையர்கள் செவர்லே கார்களுக்கான உதிரிபாகங்களை தொடர்ந்து தயாரித்து விற்பனை செய்யும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே, புதிய செவர்லே கார் வாங்கியவர்கள் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது அவசியம்.

உங்களுக்கு அறிமுகமான மெக்கானிக் இருந்தால், ஒருமுறை ஆலோசித்துவிட்டு தொடர்ந்து செவர்லே காரை வைத்துக் கொள்ள முடியும். நிச்சயம் செவர்லே கார்களுக்கான சர்வீஸ் மையங்களும், உதிரிபாகங்கள் சப்ளையும் அடுத்த சில ஆண்டுகளுக்கு நிச்சயம் தொடரும்.

மற்றொரு முக்கியமான விஷயம், இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டாலும், செவர்லே பீட், எசென்சியா உள்ளிட்ட கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட உள்ளது. எனவே, நிச்சயமாக உதிரிபாகங்கள் சப்ளையில் பிரச்னை உடனடியாக எழாது என்று நம்பலாம்.

இந்த அறிவிப்பு நிச்சயம் செவர்லே கார் உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை மறுக்க முடியாது. ஆனால், தற்போது நிதானமாக முடிவு எடுப்பதே அவசியம் என்பது டிரைவ்ஸ்பார்க் பரிந்துரைக்கும் விஷயம்.


Click it and Unblock the Notifications








