உங்கள் அபிமான ஃபியட் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது!
ஃபியட் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
இந்தியாவின் மிக பிரபலமான கார் எஞ்சின்களில் ஒன்றாக ஃபியட் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் விளங்குகிறது. நம் நாட்டில் விற்பனையாகும் 10க்கும் மேற்பட்ட கார் மாடல்களில் உயிர் கொடுத்து வரும் இந்த எஞ்சினுக்கு ஆயுள் காலத்தை குறித்துவிட்டது ஃபியட் கார் நிறுவனம்.

ஃபியட் கார் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தாக்குப் பிடித்து நிற்பதற்கு காரணமே, அந்த நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் என்பது ஊரறிந்த ரகசியம். சொற்ப எண்ணிக்கையில் கார் விற்பனையாகி வரும் நிலையில், ஃபியட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு வர்த்தகத்தையும், நிர்வாகத்தையும் இந்த எஞ்சின் உற்பத்தியால் சரிகட்டப்பட்டு வருகிறது.

நம் நாட்டின் மிக பிரபலமான மாருதி ஸ்விஃப்ட், மாருதி டிசையர், மாருதி எர்டிகா, மாருதி சியாஸ், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மாருதி பலேனோ, டாடா போல்ட், டாடா ஸெஸ்ட், ஃபியட் புன்ட்டோ, ஃபியட் லீனியா என்று வெவ்வேறு பிராண்டு கார்களின் உயிர் மூச்சாக இருக்கிறது இந்த எஞ்சின்.

செயல்திறன், மைலேஜ், நம்பகத்தன்மை, பராமரிப்பு செலவு என அனைத்திலும் மிகச் சிறந்த டீசல் எஞ்சினாக இது இந்திய கார் வாடிக்கையாளர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தால், அதனை கண்ணை மூடிக் கொண்டு வாங்கும் மனநிலை வாடிக்கையாளர் மத்தியில் காணப்படுகிறது.

இந்த நிலையில், 2020ம் ஆண்டில் இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் - VI மாசு உமிழ்வு தர விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளன. இதனால், அனைத்து கார் நிறுவனங்களும் இந்த விதிகளுக்கு ஏற்ப எஞ்சின்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இதனை உணர்ந்து கொண்டு கார் நிறுவனங்கள் பாரத் ஸ்டேஜ் - VI மாசு உமிழ்வு தர விதிகளுக்கு ஏற்ப கார் எஞ்சின்களை தயாரிக்க இப்போதே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நிலையில், பாரத் ஸ்டேஜ் - VI விதிகளுக்கு ஏற்ப ஃபியட் நிறுவனம் தனது 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினை மேம்படுத்தப்போவதில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக புதிய முதலீடு செய்யும் திட்டம் எதுவும் அந்த நிறுவனத்திடம் இல்லை என்று தெரிகிறது. எனவே, வரும் 2020ம் ஆண்டில் ஃபியட் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மின்சார கார் பயன்பாட்டுக்கு ஏற்ப சூழ்நிலைகள் வேகமாக மாறி வருவதால், இந்த எஞ்சினை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு செய்வதை தவிர்க்க ஃபியட் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் கருதப்படுகிறது.

இந்திய வாடிக்கையாளர்களின் மிகவும் நம்பகமான இந்த எஞ்சின் உற்பத்தி இன்னும் சில ஆண்டுகளில் நிறுத்தப்பட உள்ளதாக வெளியான தகவல், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தருவதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








