வர்த்தக ரீதியில் சேவைக்கு வந்த இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பஸ்!
முதல்முறையாக இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பேட்டரியில் இயங்கும் மின்சார பஸ் சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
வர்த்தக ரீதியில் சேவைக்கு வந்த இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பஸ் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்தும் விதத்தில், பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. வரும் 2030ம் ஆண்டிற்குள் முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், இதற்கான முதல்படியாக பேட்டரியில் இயங்கும் வர்த்தக வாகனங்களை தயாரிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் முதல்முறையாக வணிக ரீதியிலான முதல் எலக்ட்ரிக் பஸ் பொது சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த குலு- மணாலி- ரோத்தங் கணவாய் வரை இந்த பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த பஸ்சை கோல்டுஸ்டோன் இன்ஃப்ராடெக் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்கிறது.

இந்த பஸ் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கோல்டு ஸ்டோன் இ-பஸ் கே7 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த பஸ்சில் 25 பயணிகள் செல்ல முடியும். செங்குத்தான மலைச்சாலைகள் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 13,000 அடி உயரத்தில் இந்த மின்சார பஸ் இயக்கப்படுகிறது.

இந்த எலக்ட்ரிக் பஸ் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சாலையில் இயக்குவதற்கான தகுதிச் சான்றை இந்திய வாகன ஆராய்ச்சி கூட்டமைப்பு [அராய்] வழங்கி இருக்கிறது.

இந்த பஸ்சில் இருக்கும் பேட்டரிகளை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது அதிகபட்சமாக 200 கிமீ தூரம் வரை பயணிக்கும். 4 மணிநேரத்தில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

இந்த பஸ்சில் லித்தியம் அயான் பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி மிகவும் பாதுகாப்பானதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பஸ்சில் இருக்கும் விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பு சொகுசு பஸ்களுக்கு நிகரான பயண அனுபவத்தை தரும்.

அடுத்து 25 மின்சார பஸ்களை இமாச்சலப் பிரதேச போக்குவரத்துத் துறைக்கு டெலிவிரி கொடுக்க இருப்பதாகவும், மலைப்பாங்கான பகுதியில் இயக்கப்படும் இந்த பஸ் மின்சார பஸ்களுக்கு முன்னோடியாக இருக்கும் என்றும் கோல்டுஸ்டோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோல்டுஸ்டோன்- பிஒய்டி நிறுவனங்களின் புதிய எலக்ட்ரிக் பஸ் மாடல்கள் டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களில் ஏற்கனவே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








