கியா மோட்டார்ஸ் கார் ஆலை ஆந்திராவில் அமைய வாய்ப்பு...!!
ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் ஆந்திராவில் புதிய கார் ஆலை அமைக்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் கார் மார்க்கெட்டில் வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள அனைத்து கார் நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றன. அதில், புதிய யுக்தியாக தங்களது கீழ் செயல்படும் துணை கார் நிறுவனங்களையும் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் களமிறக்க துவங்கியுள்ளன. அந்த வகையில், டொயோட்டா நிறுவனம் லெக்சஸ் கார் பிராண்டை அடுத்த மாதம் களமிறக்க உள்ளது.

இதேபோன்று, நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் தனது கீழ் செயல்படும் கியா மோட்டார்ஸ் தயாரிப்புகளை இந்தியாவில் களமிறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது கியா மோட்டார்ஸ் கார்களை உற்பத்தி செய்வதற்கு புதிய ஆலையை அமைப்பதற்கு தீவிரமான முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் சென்னை அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. எனவே, கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் ஆலை தமிழகத்தில் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன.

தமிழக அரசும் இந்த விஷயத்தில் முனைப்பு காட்டியது. அந்த நிறுவனம் கேட்கும் நிலத்தை கையகப்படுத்தி தருவதற்கும் ஒப்புக் கொண்டது. இந்த நிலையில், தமிழகத்தில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலால் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தை கை கழுவும் நிலை இருக்கிறது.

மேலும்,அண்டை மாநிலமான ஆந்திராவில் கார் ஆலை அமைப்பதற்கு அனைத்து வகையிலும் சாதகமான சூழல் இருப்பதாக அந்த நிறுவனம் கருதுவதாக தெரிகிறது. மேலும், அனந்த்பூர் மாவட்டத்தில் 600 ஏக்கர் நிலத்தை வழங்குவதாக ஆந்திர அரசு உறுதி தெரிவித்துளளது.

வழக்கம்போல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய முதலீடுகளை வரவேற்கும் விதத்தில் பல சிறப்பு சலுகைகளை உள்ளடக்கிய திட்டத்தை கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு வழங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தமிழகத்தை விட ஆந்திராவுக்கு இந்த விஷயத்தில் சாதகமான நிலை இருக்கிறது.

இந்த நிலையில், வரும் 2019ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து இந்தியாவில் அமைக்கப்படும் புதிய ஆலையில் கார் உற்பத்தியை துவங்குவதற்கு கியா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே, விரைவில் ஆலை எங்கு அமைப்பது என்பது குறித்து கியா மோட்டார்ஸ் முடிவு செய்துவிடும்.

இந்த புதிய ஆலையில் காம்பேக்ட் செடான் கார்கள், காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் மற்றும் பட்ஜெட் விலையிலான ஹேட்ச்பேக் கார் மாடல்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த கார்கள் மாருதி கார் மாடல்கள், ஹோண்டா கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ஏன், ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கூட போட்டியாக அமைய வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில், போட்டி நிறுவனங்களால் அதிக சந்தைப் போட்டியையும் அந்த நிறுவனம் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஹூண்டாய் தயாரிப்புகளுக்கு இருக்கும் நன்மதிப்பை வைத்து இந்தியாவில் போட்டிகளை கியா மோட்டார்ஸ் கார்கள் சமாளிக்கும் என நம்பலாம்.

இந்தியாவில் புதிய கார் ஆலை அமைப்பதற்கான முயற்சிகளும், ஆயத்தப் பணிகளும் சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் புதிய ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று கியா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி பார்க்- ஹான் ஊ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
புதிய ஜீப் ரேங்லர் ரூபிகன் ரெக்கான் எஸ்யூவியின் படங்கள்!
ஜீப் ரேங்லர் எஸ்யூவியின் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஆஃப்ரோடு மாடலாக வெளியிடப்பட்டுள்ள புதிய ரேங்லர் ரூபிகன் ரெக்கான் எஸ்யூவியின் உயர் தர படங்களை கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








