டெஸ்லாவுக்கு இணையான மின்சார கார்களை களமிறக்க மஹிந்திரா தீவிரம்!
அதிசெயல்திறன்மிக்க மின்சார ஸ்போர்ட்ஸ் கார்களை மஹிந்திரா நிறுவனம் களமிறக்க உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
யுட்டிலிட்டி ரக கார் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் மஹிந்திரா நிறுவனம், பேட்டரியில் இயங்கும் மின்சார கார் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும், தனது முதலீட்டை அதிக அளவு மின்சார கார் தயாரிப்பில் கொட்டி வருகிறது.

கேயூவி100, ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 ஆகிய கார்களின் மின்சார மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. இந்த நிலையில், டெஸ்லா கார்களை போன்று அதி செயல்திறன்மிக்க 3 புதிய மின்சார கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது மஹிந்திரா.

வரும் 2019-2020ம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்த மூன்று புதிய மின்சார கார்களும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளத்திற்கு பேட்டியளித்த மஹிந்திரா மின்சார வாகனப் பிரிவு தலைமை செயல் அதிகாரி மகேஷ் பாபு இந்த தகவலை கூறி இருக்கிறார்.

இந்த மூன்று புதிய மின்சார கார்களில் ஒன்று அதிகபட்சமாக மணிக்கு 150கிமீ வேகம் வரையில் செல்லும். மற்றொன்று மணிக்கு 186 கிமீ வேகம் வரையிலும், அதிசெயல்திறன்மிக்க மாடல் மணிக்கு 190 கிமீ வேகத்தில் செல்லும் திறன் பெற்றவையாக இருக்கும்.

அதேபோன்று, இந்த கார்கள் 0- 100 கிமீ வேகத்தை முறையே 11 வினாடிகள், 9 வினாடிகள் மற்றும் 8 வினாடிகளில் எட்டும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார்களை ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் முறையே 250 கிமீ தூரம், 350 கிமீ தூரம் மற்றும் 300 கிமீ தூரம் பயணிக்க வல்லதாக இருக்கும்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹாலோ என்ற மின்சார ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடலை மஹிந்திரா காட்சிக்கு வைத்திருந்தது. எனவே, மின்சார ஸ்போர்ட்ஸ் கார் உருவாக்கத்தில் மஹிந்திரா தீவிரமாக இறங்கியுள்ளது தெரிந்த விஷயம்தான்.
Recommended Video


தற்போது மஹிந்திரா நிறுவனம் இ2ஓ, இ-வெரிட்டோ, இ-சுப்ரோ மற்றும் இ- ஆல்ஃபா மினி ஆகிய மின்சார மாடல்களை தயாரிக்கிறது. அடுத்து கேயூவி100 எஸ்யூவியின் மின்சார மாடலையும் களமிறக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது.

மொத்தத்தில் பெட்ரோல், டீசல் கார்கள் மீதான கட்டுப்பாடுகளை அரசு இறுக்கினால், அதனை எதிர்கொள்வதற்கு மஹிந்திரா தயாராக இருக்கிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டால், அந்த நிறுவனத்தின் மின்சார கார்கள் சர்வசாதாரணமாக தனிநபர் மார்க்கெட்டில் கிடைக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications








