புதிய மஹிந்திரா எம்பிவி காரின் ஸ்பை படங்கள்... இன்னோவா போட்டியாளர்!
டொயோட்டா இன்னோவா காருக்கு போட்டியாக வரும் புதிய மஹிந்திரா எம்பிவி கார் கர்நாடக மாநிலம், தாவணகெரெ அருகே சாலை சோதனை ஓட்டத்தில் இருந்தபோது, எடுக்கப்பட்ட பிரத்யேக படங்களை இந்த செய்தியில் காணலாம்.
யுட்டிலிட்டி ரக கார்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில், இரண்டு புதிய 7 சீட்டர் மாடல்களை சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருக்கிறது.

இதில், ஒன்று எம்பிவி வகை யுட்டிலிட்டி கார். மற்றொன்று எஸ்யூவி வகை யுட்டிலிட்டி மாடல். இந்த நிலையில், டொயோட்டா இன்னோவா கார் மார்க்கெட்டில் சிறிது பங்களிப்பை பெறும் வகையில், மஹிந்திரா நிறுவனம் புதிய எம்பிவி காரை சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது. யு321 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய மாடல் தற்போது விற்பனையில் இருக்கும் மஹிந்திரா ஸைலோ காருக்கு மாற்றாக வர இருக்கிறது.
Recommended Video


நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், மஹிந்திராவின் பாரம்பரிய டிசைன் தாத்பரியங்களை தாங்கி வரும் இந்த புதிய மாடல் கர்நாடக மாநிலம், தாவணகெரெ என்ற இடத்தில் சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட பிரத்யேக படங்களை இந்த செய்தியில் பகிர்ந்துள்ளோம்.

சில மாதங்களுக்கு முன்பு வந்த ஸ்பை படங்களில் இருந்த மாடலுக்கும், தற்போது சோதனை ஓட்டம் நடத்தப்படும் மாடலுக்கும் பல மாற்றங்கள் தெரிகின்றன. தற்போது மஹிந்திராவின் 8 ஸ்லாட் க்ரில் அமைப்பும், அதன் நடுவில் மஹிந்திரா லோகோ பிரதானமாக காட்சி தருகிறது.

ஏற்கனவே இந்த காரில் ஸ்டீல் வீல்கள் பொருத்தப்பட்டு இருந்தன. ஆனால், தற்போதைய ஸ்பை படங்களை பார்க்கும் போது மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரில் இருப்பது போன்ற அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இந்த எம்பிவி காரின் தோற்றத்திற்கு இந்த சக்கரங்கள் சிறியதாக தெரிகிறது.

இந்த காருக்கான எஞ்சின் விபரங்கள் குறித்த தகவல் இல்லை. இந்த காரில் 2.0 லிட்டர் எம்ஹாக் டர்போ டீசல் எஞ்சின் பொருத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேபோன்று, தனது கீழ் செயல்படு சாங்யாங் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள புதிய 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் இதில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தற்போது சோதனை ஓட்ட ஆய்வுகளின்படி, சிறிய மாற்றங்களுடன் இந்த கார் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, அடுத்த ஆண்டு இந்த கார் முழுமையான தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு உற்பத்திக்கு அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வரும் பிப்ரவரி மாதம் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச வாகன கண்காட்சியிலும் பார்வைக்கு வைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நாஷிக் நகரில் உள்ள ஆலையில் இந்த புதிய கார் உற்பத்தி செய்யப்படும்.

இந்த கார் ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான இடவசதி, நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் சிறந்த மாடலாக வெளிவரும் என்பதால் ஆவலைத் தூண்டி இருக்கிறது. இந்த காருடன் மஹிந்திரா டியூவி500 எஸ்யூவியும் சேர்ந்து சோதனை ஓட்டத்தில் இருந்தது. அதன் படங்களையும் விரைவில் பகிர்ந்து கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications








