மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம் நிறைவு: வெற்றி பெற்றவர்கள் விபரம்!
கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடந்த மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம் நிறைவடைந்தது. இந்த பந்தயத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
இடைவிடாத மழைக்கு இடையிலும், விறுவிறுப்பாக நடந்து முடிந்த மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று புனேயில் நடந்த நிகழ்ச்சியில் பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

9-வது மாருதி தக்ஷின் டேர் ராலி பந்தயம் கடந்த திங்கட்கிழமை பெங்களூரில் துவங்கியது. இந்த ராலி பந்தயத்தில் 180 போட்டியாளர்கள் பங்கேற்றனர். சுமார் 2,000 கிமீ தூரத்திற்கு நடந்தது. இந்த பந்தயம் சித்ரதுர்கா, பெல்காம், கோல்ஹாப்பூர் வழியாக புனேயில் நேற்று நிறைவடைந்தது. இந்த பந்தயத்தில் வெற்றி பெற்றவர்கள் விபரம் புனே நகரில் நடந்த நிகழ்ச்சியில் இன்று வெளியிடப்பட்டது.

அல்டிமேட் கார்ஸ் பிரிவில் சுரேஷ் ராணா மற்றும் அஷ்வின் நாயக் ஜோடி முதலிடம் பிடித்தனர். அல்டிமேட் பைக்ஸ் பிரிவில் டிவிஎஸ் மோட்டார்ஸ்போர்ட் அணியை சேர்ந்த ஆர்.நட்ராஜ் முதலிடம் பிடித்தார்.

அல்டிமேட் கார்ஸ் பிரிவில் சாம்ராட் யாதவ் மற்றும் எஸ்என்.நிஸாமி ஜோடி இரண்டாம் இடத்தையும், சந்தீப் ஷர்மா மற்றும் கரண் ஆர்யா ஆகியோர் குழு மூன்றாம் இடத்தையும் பிடித்தது. இந்த இருவரும் மாருதி ஜிப்ஸி எஸ்யூவியை பயன்படுத்தினர்.

இந்த ராலி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு புனேயில் நடந்த நிகழ்ச்சியில் பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன. அல்டிமேட் கார்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற சுரேஷ் ராணா கூறுகையில்," இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆண்டு புதிய வழித்தடத்தில் போட்டி நடந்தது. புதிய போட்டியாளர்களும் இணைந்ததால் இந்த ஆண்டு போட்டி மிக சவாலானதாகவே இருந்தது.

அல்டிமேட் பைக்ஸ் பிரிவில் முதலிடத்தை ஆர்.நட்ராஜ் பிடித்த நிலையில், இரண்டாவது இடத்தை அப்துல் வாஹீத் மற்றும் மூன்றாவது இடத்தை சஞ்சய் குமார் பிடித்தனர்.

என்டியூரன்ஸ் பிரிவில் சுபிர் ராய் மற்றும் நிரவ் மேத்தா ஜோடி முதலிடம் பெற்றது. கார்த்திக் மாருதி மற்றும் ஷங்கர் எஸ் ஆனந்த் இணை இரண்டாவது இடத்தையும், ரகு நந்தன் மற்றும் பிரகாஷ் இணை மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாருதி சுஸுகி நிறுவனத்தின் துணை நிர்வாக தலைவர் தருண் கார்க்," கடந்த 9 ஆண்டுகளில் மாருதி தக்ஷின் டேர் ராலி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற்றிருக்கிறது. தென் இந்தியாவின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையில் மிக வலுவான தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆண்டுக்கு ஆண்டு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் மகிழ்ச்சியான விஷயம். மிக நீண்ட தூர இந்த ராலி பந்தயத்தில், மோட்டார் பந்தய வீரர்கள் தங்களது திறனை பரிசோதித்துக் கொள்வதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்பை இந்த ராலி பந்தயம் ஏற்படுத்தி வருகிறது.

கன மழை மற்றும் மோசமான சீதோஷ்ண நிலையிலும், போட்டியாளர்கள் சளைக்காமல் இலக்கை தொடுவதற்கு துடிப்புடன் செயல்பட்டுள்ளனர். இனி ஆண்டுதோறும் புதிய வழித்தடங்களில் இந்த போட்டி நடத்தப்படும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








