இந்தியா வரும் பீஜோ கார்களின் விபரம் வெளியானது!
இந்தியாவில் மீண்டும் கார் விற்பனையை துவங்குவதற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் கார் மாடல்களின் விபரம் குறித்த தகவல்களை இந்த செய்தியில
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ கார் நிறுவனம் இந்தியாவில் கார் விற்பனையை துவங்குவதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், பீஜோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் கார் மாடல்களின் விபரங்களை ஓவர்டிரைவ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வரும் 2020ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் வர்த்தகத்தை துவங்குவதற்கு பீஜோ கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சொந்தமாக ஆலை கட்டுவதற்கு பதிலாக, சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையை பெற்று கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக இரண்டு ஹேட்ச்பேக் ரக கார்கள் மற்றும் இரண்டு எஸ்யூவி ரக மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு பீஜோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு ரக கார்களுக்கும் இந்தியாவில் வலுவான சந்தை இருப்பதே இதற்கு காரணம்.

முதலாவதாக தனது 208 என்ற ஹேட்ச்பேக் கார் மாடலை களமிறக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த கார் ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு நிகரான ரகத்தில் வருகிறது.

இரண்டாவது ஹேட்ச்பேக் மாடலாக பீஜோ 308 கார் வர இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த கார் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் பற்றிய அதிக தகவல்கள் இப்போது இல்லை. இந்த காரும் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்படும்.

அடுத்ததாக, பீஜோ 2008 மற்றும் 3008 ஆகிய இரண்டு எஸ்யூவி மாடல்களும் இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளன. இதில், 3008 எஸ்யூவி மாடல் ஜெனிவா மோட்டார் ஷோவில் 2017ம் ஆண்டின் சிறந்த எஸ்யூவி ரக காருக்கான விருதை வென்றது குறஇப்பிடத்தக்கது.

பீஜோ 2008 மற்றும் 3008 ஆகிய இரண்டு மாடல்களிலும் ஒரே எஞ்சின்கள்தான் பயன்படுத்தப்படும். 2008 எஸ்யூவி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும். 3008 எஸ்யூவி மாடல் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

சென்னையிலுள்ள ஆலை மட்டுமின்றி, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்வீஸ் மையங்களையும், டீலர்ஷிப்புகளையும் கூட பீஜோ பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்தியாவுக்கான பிரத்யேக மாடல்களாக அறிமுகம் செய்யப்படும் என்று ஏற்கனவே பீஜோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடயே, அம்பாசடர் கார் பிராண்டை ஏற்கனவே பீஜோ நிறுவனம் வாங்கி இருக்கிறது. எனவே , அந்த பிராண்டையும் பீஜோ பயன்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் அம்பாசடர் ரசிகர்களிடையே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








