இந்தியாவிற்கான முதல் மின்சார பேருந்து போக்குவரத்து; தமிழகத்தில் அறிமுகமாக வாய்ப்பு..!!
வாய்பிருந்தால், இந்தியாவில் மின்சார பேருந்துகளை நடைமுறைக்கு கொண்டு வரும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்.
இந்தியாவில் மின்சார பேருந்துகளுக்கான முதல் சோதனை ஓட்டம் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டது.
இதில் பிரபல அசோக் லெய்லேன்ட் நிறுவனம் தயாரித்த மின்சார பேருந்துகள் சோதனைக்காக உட்படுத்தப்பட்டன.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்திலும், மாசு அளவை குறைக்கும் நோக்கிலும் பல நாடுகள் மின்சார வாகன சேவைகளை ஊக்குவித்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் மத்திய அரசு 2030ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களும் மின்சார ஆற்றலுக்கு மாற்ற முயற்சிக்கப்படும் என்று கூறியுள்ளது.

இதன் முதல்படியாக மஹாராஷ்டிராவில் மின்சார கால் டாக்ஸி சேவை அறிமுகமானதை தொடர்ந்து தமிழகத்தில் மின்சார பேருந்து சேவை அறிமுகமாகவுள்ளது.

மின்சார பேருந்துகளுக்கான சோதனை ஓட்டம் சென்னையில் நடத்தப்பட்டதாகவும், இதில் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் மற்றும் அசோக் லெய்லேன்ட் நிறுவனத்தை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்ததாக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நடைமுறைக்கு ஏற்றவாறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மின்சார பேருந்து போக்குவரத்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மேலும் கூறினார்.

சென்னையில் நடத்தப்பட்ட மின்சார பேருந்திற்கான சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளதாகவும், தமிழக அரசு அதை நிரந்தர போக்குவரத்து ஊர்தியாக நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்காக மின்சார பேருந்துகளை தயாரித்துள்ள அசோக் லெய்லேன்ட் நிறுவனம் கடந்தாண்டு ’சர்கியூட்’ என்ற பெயரில் சொகுசு வசதிகளை வழங்கக்கூடிய மின்சார பேருந்தை தயாரித்தது.

சிறந்த வடிவமைப்புடனும், ஆற்றல் மிகுந்ததாக கருதப்படும் இந்த பேருந்தின் தயாரிப்பு பணிகள் அனைத்தும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது.
முற்றிலும் மாசு ஏற்படுத்தாத, இந்திய சாலைகளுக்கு ஏற்ற திறனுடன் சர்கியூட் பேருந்தை அசோக் லெய்லேன்ட் தயாரித்துள்ளது.

மின்சார வாகன தயாரிப்பில், இந்தியா அடுத்தக்கட்டத்திற்கு செல்ல ’சர்கியூட்’ பேருந்துகளின் தயாரிப்பு பணிகள் வழிவக்கும் என தெரிவித்துள்ளார் அசோக் லெய்லேன்ட் தலைமை அதிகாரி வினோத் கே தாசரி.

ஒரு முறை பேட்டரிகளை சார்ஜ் செய்தால், சுமார் 120 கிலோ மீட்டர் வரை சர்கியூட் பேருந்துகளால் பயணம் செய்ய முடியும்.

சென்னையில் தயாராகும் இந்த 'சர்கியூட்' பேருந்துகள் மற்ற மாநில அரசுகளும் போக்குவரத்திற்காக பயன்படுத்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








