டாடா குழுமத்தின் புதிய தலைவராக சந்திரசேகர் நியமனம்... நானோ காருக்கு நல்ல காலம் பொறக்குது!
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமாக விளங்கும் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றதையடுத்து, சிரஸ் மிஸ்திரி அந்த பொறுப்புக்கு வந்தார்.

இந்த நிலையில், ரத்தன் டாடாவுக்கும், சைரஸ் மிஸ்திரிக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்தது. பிரச்னை புகைந்து பெரிதான நிலையில், சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சைரஸ் மிஸ்திரி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ரத்தன் டாடா மீதும், டாடா சன்ஸ் குழுமத்தின் பொறுப்பாளர்கள் மீதும் அள்ளி வீசியதோடு, கடிதமும் எழுதினார்.

இதனால், கடந்த சில மாதங்களாக இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில், டாடா சன்ஸ் குழுமத்திற்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் நடந்தது. அதில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் அந்த நிறுவனத்தின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்ட சந்திரசேகரன் தற்போது டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் பிப்ரவரி 17ந் தேதி அவர் தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார்.

டாடா குழுமத்தின் 150 ஆண்டுகால வரலாற்றில் பார்சி இனத்தவர் அல்லாத ஒருவர் அதன் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.

டாடா சன்ஸ் குழுமத்தின் கீழ் ஏராளமான நிறுவனங்கள் இருந்தாலும், வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள டாடா மோட்டார்ஸ் மீது ரத்தன் டாடாவுக்கு தனி அக்கறை உண்டு. மேலும்,அவரது கனவில் உருவான டாடா நானோ கார் குறித்து சைரஸ் மிஸ்திரி கடும் விமர்சனம் செய்திருந்தார்.

நானோ கார் 1,000 கோடி ரூபாயை விழுங்கிவிட்டதாகவும் காட்டமாக கூறியிருந்தார். அந்த திட்டம் தோல்வி என்று தெரிந்தும், அதனை கட்டிக் கொண்டு அழுவது என்ற ரீதியில் சைரஸ் மிஸ்திரி ரத்தன் டாடாவை விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பிரச்னைகளை சரிசெய்வதற்கு சந்திரசேகர் தனி கவனம் செலுத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா நானோ கார் திட்டத்தால் சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்டதாக டாடா மோட்டார்ஸ் மீது விமர்சனம் இருக்கிறது. அதனை போக்குவதற்கான முயற்சிகளை சந்திரசேகர் எடுப்பார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

மேலும், பயணிகள் வாகனத் துறையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை எட்டுவதற்கான நடவடிக்கைகளையும் சந்திரசேகர் எடுப்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. சந்திரசேகர் வருகையால் டாடா மோட்டார்ஸ் வர்த்தகம் புத்துணர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கி இருக்கிறது.
டாடா சன்ஸ் குழுமத் தலைவராக பொறுப்பேற்கும் சந்திரசேகருக்கு வாழ்த்துகள்.
டிரையம்ஃப் ஸ்ட்ரீட் கப் பைக்கின் படங்கள்!
டிரையம்ஃப் ஸ்ட்ரீட் கப் பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








