டெஸ்லா கார் நிறுவனம் விரைவில் இந்தியாவில் கால் பதிக்கிறது: எலான் மஸ்க் தகவல்!
வரும் கோடை காலத்தில் இந்தியாவில் டெஸ்லா கார் பிராண்டை அறிமுகம் செய்யும் திட்டம் உள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சொகுசு எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் உலக அளவில் பிரபலமான நிறுவனமாக விளங்குகிறது. டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகிய சொகுசு வகை எலக்ட்ரிக் கார்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில், உலக அளவில் தனது வர்த்தக விரிவாக்க நடவடிக்கைகளில் டெஸ்லா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, இந்தியாவிலும் அந்த நிறுவனம் கால் பதிக்க இருப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்தது. மாடல் 3 என்ற குறைவான விலை எலக்ட்ரிக் கார் மாடலை அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த புத்தம் புதிய மாடலை இந்தியாவில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டெஸ்லா முடிவு செய்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோது, இந்த காருக்கு சர்வதேச அளவில் ஆன்லைனில் முன்பதிவு நடந்தது. அப்போது, இந்தியாவிலிருந்தும் முன்பதிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பல இந்திய பிரபலங்கள் இந்த காரை முன்பதிவு செய்து, அந்த தகவலைசமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர்.

இந்த நிலையில், டெஸ்லா கார்கள் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து டெஸ்லா மோட்டார்ஸ் தலைமை அதிகாரி எலான் மஸ்க்கிடம் ட்விட்டர் மூலமாக இஷான் கோயல் என்பவர் வினவியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க், இந்த ஆண்டு கோடை காலத்தில் இந்தியாவில் கால் பதிப்போம் என்று நம்புகிறோம் என்று அவர் பதில் அளித்துள்ளார்.

இதனால், வரும் மே மாத வாக்கில் இந்தியாவில் டெஸ்லா கார் பிராண்டு முறைப்படி கால் பதிக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே அறிவித்தது போன்று, டெஸ்லா மாடல் 3 கார் முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிக குறைவான விலை மாடலாக மாடல் 3 எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புதிய காரின் பேட்டரி மிகவும் திறன் வாய்ந்ததாக இருக்கும். ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 346 கிமீ தூரம் வரை பயணிக்கும். 0-100 கிமீ வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டிவிடும் திறன் வாய்ந்தது. அதாவது, பல சக்திவாய்ந்த பெட்ரோல், டீசல் கார்களுக்கு இணையான செயல்திறனை வெளிப்படுத்தும்.

இந்த காரில் டேப்லெட் கம்ப்யூட்டர் போன்ற பெரிய திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்ப்டடு இருக்கிறது. இந்த சாதனத்தின் மூலமாக பல்வேறு தகவல்களை பெற முடியும். இந்த காரில் 5 பேர் வரை சொகுசாக பயணிக்க இடவசதி இருக்கும்.

இந்த காரின் முன்புறத்திலும், பின்புறத்திலும் இரண்டு பூட் ரூம்கள் உள்ளன. இதனால், அதிக பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கான வசதியையும் இந்த கார் கொண்டுள்ளது. அமெரிக்காவில் 35,000 டாலர் விலை மதிப்பில், அதாவது, ரூ.23.5 லட்சம் விலையில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஆனால், இந்தியாவில் இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளதால், வரி உள்பட சேர்த்து கிட்டத்தட்ட ரூ.45 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன தொழில்நுட்ப வசதிகள், சிறப்பான செயல்திறன் உள்ளிட்டவை இந்த காருக்கு இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெற்று தரும் என்று கருதப்படுகிறது.

இதனிடையே, கடந்த ஆண்டு அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் டெஸ்லா மோட்டார்ஸ் ஆலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு வந்தனர். அப்போது, இந்தியாவில் டெஸ்லா ஆலையை துவங்குவதற்கு அழைப்பு விடுத்தனர்.

இதனால், எதிர்காலத்தில் இந்தியாவில் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் உற்பத்தி ஆலையை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. அப்போது இந்தியாவில் டெஸ்லா கார்களின் விலை வெகுவாக குறையும். இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும்போது எலக்ட்ரிக் கார்களுக்கான மத்திய அரசின் மானியத் திட்டமும் பொருந்தும் என்பதால், விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.

இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஆசிய பிராந்திய நாடுகளுக்கும் டெஸ்லா கார்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது. வரும் மே மாத வாக்கில் இதுகுறித்த கூடுதல் தகவல்களை டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்லா மாடல் எஸ் சொகுசு எலக்ட்ரிக் காரின் படங்கள்!
வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற டெஸ்லா மாடல் எஸ் சொகுசு எலக்ட்ரிக் காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.


Click it and Unblock the Notifications








