புதிய வகை மின்சார கார் பேட்டரியுடன் புரட்சி ஏற்படுத்தப் போகும் டொயோட்டா!
மின்சார கார்களுக்கான புதிய பேட்டரியை டொயோட்டா உருவாக்கி வருகிறது. இந்த புதிய பேட்டரியை 2022ம் ஆண்டுவாக்கில் வணிக ரீதியில் அறிமுகப்படுத்த டொயோட்டா திட்டமிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் மின்சார கார்களை தயாரிப்பதற்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. நீண்ட தூரம் செல்வதற்கான சிறந்த மின்திறனை சேமித்து வழங்கும் பேட்டரியை தயாரிப்பதுதான் இப்போதைக்கு ஆட்டோமொபைல் துறையினருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், மின்சார கார்களுக்கான திறன் மிக்க பேட்டரியை உருவாக்குவதில் பல புதிய தொழில்நுட்பங்களை கண்டறிவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அதில், டொயோட்டா ஒரு முக்கிய தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது.

தற்போது திறன் மிக்கதாக கருதப்படும் லித்தியம் அயான் பேட்டரியில் திரவ நிலை மின்பகுபொருள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், டொயோட்டா நிறுவனம் திட மின்பகு பொருள் கொண்ட புதிய பேட்டரியை உருவாக்கி வருகிறது.

இந்த புதிய பேட்டரியானது மிக நீண்டதூர பயணத்திற்கான மின் திறனை மின் மோட்டார்களுக்கு வழங்கும். அதேபோன்று, செயல்திறனும் மிகச் சிறப்பாக இருக்கும்.
Recommended Video


இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக பேட்டரியின் வடிவமும் சிறிய அளவில் குறைவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளது. இவற்றைவிட மிக முக்கிய சிறப்பம்சம் ஒன்றும் டொயோட்டா தயாரிக்கும் பேட்டரியில் இடம்பெற இருக்கிறது.

அதாவது, சில நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும். லித்தியம் அயான் பேட்டரியைவிட மிகுந்த பாதுகாப்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், மின்சார கார் தொழில்நுட்பத்தில் டொயோட்டாவின் இந்த புதிய தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2022ம் ஆண்டில் இருந்து இந்த புதிய தொழில்நுட்பத்திலான பேட்டரியை வணிக ரீதியில் அறிமுகம் செய்ய டொயோட்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








