ஆடிக்கு அடித்த அடி... புகை உமிழ்தல் மோசடி வழக்கில் சிஇஒ அதிரடி கைது!
புகை உமிழ்தல் சோதனையில் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், ஆடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரூபெர்ட் ஸ்டெட்லர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
புகை உமிழ்தல் சோதனையில் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், ஆடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரூபெர்ட் ஸ்டெட்லர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

உலகப்புகழ் பெற்ற கார் நிறுவனங்களுள் ஒன்று போக்ஸ்வேகன். ஜெர்மனி நாட்டின் வோல்ஸ்பர்க் நகரில் இதன் தலைமையகம் உள்ளது. ஆடி, பென்ட்லே, புகாட்டி, லம்போர்கினி, போர்சே, சியட், ஸ்கோடா ஆகிய அனைத்து கார் நிறுவனங்களும் போக்ஸ்வேகன் குரூப்பிற்கு சொந்தமானவைதான்.

அந்தந்த நிறுவனங்களின் பெயரில் போக்ஸ்வேகன் குரூப் கார்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர டுகாட்டி பிராண்டின் கீழ் மோட்டார் சைக்கிள்களையும், ஸ்கேனியா உள்ளிட்டபிராண்டுகளின் கீழ் வணிக பயன்பாட்டு வாகனங்களையும் போக்ஸ்வேகன் குரூப் விற்பனை செய்கிறது.

ஒவ்வொரு நாடுகளும், கார்களில் இருந்து குறிப்பிட்ட அளவு புகைதான் வெளிவர வேண்டும் என்ற அளவுகோலை வைத்துள்ளன. இதனை அடிப்படையாக வைத்து, தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் மற்றும் இறக்குமதியாகும் கார்களில் புகை உமிழ்தல் சோதனையை அந்தந்த அரசுகள் நடத்துகின்றன.

புகை உமிழ்தல் சோதனையானது ஆங்கிலத்தில் எமிஷன் டெஸ்ட் என அழைக்கப்படுகிறது. இதனிடையே போக்ஸ்வேகன் நிறுவனம், அமெரிக்காவுக்கும் கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அங்கு நடத்தப்பட்ட புகை உமிழ்தல் சோதனையில் தேறுவதற்காக நூதன மோசடி ஒன்றை போக்ஸ்வேகன் செய்திருந்தது.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களில், முறைகேடான சாப்ட்வேர் ஒன்றை போக்ஸ்வேகன் நிறுவனம் பொருத்தியிருந்தது. இந்த சாப்ட்வேரின் உதவியால், சோதனை கூடத்தில் டெஸ்ட் செய்யப்படும்போது, கார்களில் இருந்து அதிகளவில் புகை வெளியாகவில்லை.

ஆனால் சாலைகளில் ஓடும்போது, 40 சதவீத அதிக புகையை அந்த கார்கள் உமிழ்ந்தன. இதற்கு போக்ஸ்வேகன் நிறுவனம் பொருத்தியிருந்த சாப்ட்வேர்தான் காரணம் என்பது பின்னாளில் கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் ஆட்டோமொபைல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 10.7 மில்லியன் கார்களில், சாப்ட்வேர் பொருத்தி, புகை உமிழ்தல் சோதனையில் மோசடி செய்ததை, கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம், போக்ஸ்வேகன் நிறுவனம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது.

இதன்பின் இந்த மோசடி ஆடி நிறுவன கார்களிலும் அரங்கேறியிருக்கலாம் என்று கூறப்பட்டது. இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஆடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ரூபர்ட் ஸ்டெட்லர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

முன்னதாக போக்ஸ்வேகன் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மார்டின் வின்டெர்கார்ன் மீது கடந்த மே மாத முதல் வாரத்தில் அமெரிக்கா கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது. ஆனால் ஜெர்மனி குடிமகன் என்ற அடிப்படையில், மார்டின் வின்டெர்கார்ன் தப்பி கொண்டார்.

ஐரோப்பிய யூனியனில் இடம்பெறாத நாடுகளிடம், ஜெர்மனி தங்களது குடிமக்களை ஒப்படைக்காது. அமெரிக்காவானது, ஐரோப்பிய யூனியனில் வராது என்பதால், மார்டின் வின்டெர்கார்ன் தப்பி விட்டார். ஆனால் அமெரிக்கா கேட்டு கொண்டதின் பேரில், ரூபர்ட் ஸ்டெட்லர் கைது செய்யப்படவில்லை.

புகை உமிழ்தல் மோசடி தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சாட்சியங்களை களைத்து விடக்கூடும் என்பதால்தான், ரூபெர்ட் ஸ்டெட்லர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூபெர்ட் ஸ்டெட்லரின் வீடு புகுந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரூபெர்ட் ஸ்டெட்லர், கடந்த 1990ம் ஆண்டு முதல் போக்ஸ்வேகன் குரூப்பில் வேலை செய்து வருகிறார். அவருக்கு தற்போது 55 வயதாகிறது. இந்த விவகாரம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக, போக்ஸ்வேகன் நிறுவனத்தின் மேற்பார்வை குழு கூடி ஆலோசிக்க உள்ளது.

புகை உமிழ்தல் சோதனையில் மோசடி செய்ததற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்புதான், போக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ஜெர்மனியில் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்நிறுவனத்திற்கு அடுத்த இடி விழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








