2018 இறுதிக்குள் சென்னையில் மின்சார பேருந்து போக்குவரத்து அறிமுகம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி..!!
2018 இறுதிக்குள் சென்னையில் மின்சார பேருந்து போக்குவரத்து அறிமுகம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி..!!
சென்னையில் இந்தாண்டு இறுதிக்குள் மின்சார பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என தமிழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லி நொய்டாவில், 2018 ஆட்டோ எக்ஸ்போ கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் மின்னாற்றல் பெற்ற வாகனங்கள் அதிகளவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மின்சார ஆற்றல் பெற்ற பேருந்துகளை இயக்க அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களை போடப்பட்டுள்ளன.

இதற்கான மின்சார பேருந்துகளின் பயன்பாடு மற்றும் அதிலுள்ள முக்கிய அம்சங்களை தெரிந்துக்கொள்ள தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை நேற்று பார்வையிட்டார்.

பிறகு டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆட்டோ எக்ஸ்போவில் ஏற்பட்ட அனுபவங்களை பற்றி பேட்டியளித்தார்.

நொய்டா 2018 ஆட்டோ எக்ஸ்போவில் எதிர்காலத்திற்கான பல மின்சார வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பவேறு மின்சார பேருந்துகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

சென்னையில் முதற்கட்டமாக 200 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான வழிமுறைகள் பற்றி ஆட்டோ எக்ஸ்போவில் கேட்டறிந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தவிர மின்சார பேருந்துகளை சென்னையில் அறிமுகப்படுத்துவதற்கு மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகத்திடம் அலோசனை நடத்தி அனுமதி வாங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையின் முதற்கட்டமாக பயன்பாட்டிற்கு வரும் மின்சார பேருந்துகளில் ஒன்றில் 4 பேட்டரிகள் இருக்கும்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ வரை செல்லக்கூடிய திறனுடன் இந்த பேருந்துகள் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தவிர, ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு இருந்த பேருந்துகள் பெரும்பாலும் தானியங்கி மாற்று முறையில் இயங்கும் ஒரே ஒரு பேட்டரியுடன் இடம்பெற்றிருந்தன. ஒருமுறை சார்ஜ் செய்தால் அந்த பேருந்துகள் 50 கி.மீ முதல் 60 கி.மீ வரை செல்லும்.

4 பேட்டரிகள் கொண்ட ஒரு பேருந்தின் மதிப்பு ரூ. 4 கோடி. ஆனால் தானியங்கி முறையில் இயங்கும் பேட்டரியை கொண்ட பேருந்தின் விலை அதை விட குறைவு.
தவிர, அதன் பயன்பாடும் மிக எளிது. பேட்டரியில் சார்ஜ் தீர்ந்திவிட்டால் மூன்று நிமிடத்தில் மாற்றும் பேட்டரியை தானியங்கி முறையில் பொருத்திவிடலாம்.

இந்த காரணங்களாக தற்போது தமிழக அரசு இந்த வகை பேருந்துகளை தேர்வு செய்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். விரைவில் இந்த பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மின்சார பேருந்துகளை மாநிலங்கள் வாங்க அதற்கான முதலீட்டு செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.
மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்களில் முதலீடு செலவு அதிகமாக இருந்தாலும், இயக்கச்செலவு குறைவு தான்.

போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதற்கும் மின்சார பேருந்து பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்கும் எந்த சம்மந்தம் இல்லை. இனி வருங்காலத்தில் மின்சார திறன் பெற்ற பேருந்துகள் தான் அதிகம் இயங்கும் என்று தெரிவித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.


Click it and Unblock the Notifications








