டெஸ்லா கார்களின் இந்திய வருகை விபரத்தை வெளியிட்ட எலான் மஸ்க்!
அடுத்த ஆண்டு டெஸ்லா மின்சார கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
அடுத்த ஆண்டு டெஸ்லா மின்சார கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் தொழில்நுட்பத்திலும், சொகுசு அம்சங்களிலும் மிக சிறப்பானதாக இருக்கின்றன. இதனால், இந்த கார்களுக்கான வரவேற்பு மிக அதிக அளவில் இருந்து வருகிறது. அதிக தூரம் பயணிக்கும் திறன், சமரசமில்லாத செயல்திறன், அதிக தொழில்நுட்ப வசதிகள், மிக தாராளமான இடவசதி, ஆட்டோ பைலட் சிஸ்டம் என வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
இந்த நிலையில், அமெரிக்காவை தவிர்த்து, ஐரோப்பாவிலும் தனது வர்த்தகத்தை துவங்கிய டெஸ்லா நிறுவனம் அடுத்து ஆசிய, ஆப்ரிக்க நாடுகளிலும் களமிறங்க உள்ளது. அதன்படி, வட அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு கால் பதிக்க இருப்பதாக டெஸ்லா தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவிலும், ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் அடுத்த ஆண்டு வர்த்தகத்தை துவங்க இருப்பதாகவும், 2020ம் ஆண்டு முழுமையான வர்த்தகத்தை துவங்க இருப்பதாகவும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சொகுசு கார்களுக்கு இணையான ரகத்தில் டெஸ்லா மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் விலை குறைவான மாடல்- 3 கார்தான் இந்தியாவில் முதலாவது டெஸ்லா மாடலாக வர இருக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட டெஸ்லா மாடல்- 3 காருக்கு முன்பதிவும் உலக அளவில் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டது. இந்த புதிய டெஸ்லா மாடல் 3 காருக்கு இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் உள்பட பலர் முண்டியடித்து முன்பதிவு செய்தனர். இதனால், முன்பதிவு 3 லட்சத்தை தாண்டி சென்றதால், டெஸ்லா நிறுவனம் திக்குமுக்காடி போனது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மாடல் - 3 மின்சார காரின் முன்பதிவு துவங்கப்பட்டதுடன், டெலிவிரியும் கொடுக்கப்பட்டது. இந்த கார் வரிசை கிரமப்படி, வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழலில், அடுத்த ஆண்டு டெஸ்லா மாடல் - 3 மின்சார கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது எலான் மஸ்க் கருத்து மூலமாக உறுதியாகி இருக்கிறது. மேலும், படிப்படியாக ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் மையங்களை அமைக்கும் பணிகளையும் டெஸ்லா துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இறக்குமதி கார்களுக்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. மேலும், 2,000 யூனிட்டுகள் வரை ஹோமோலாகேஷன் எனப்படும் மாற்றங்கள் செய்யாமல் இறக்குமதி செய்யும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, முன்பதிவு செய்தவர்களுக்கு இறக்குமதி செய்து டெலிவிரி கொடுக்கப்படும் வாய்ப்புள்ளது.

நிச்சயம் டெஸ்லா மாடல் - 3 காருக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இந்தியாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பல சவால்களை சந்திக்க வேண்டி இருப்பதாக எலான் மஸ்க் ட்விட்டரில் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








