எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் குறி வைப்பது இந்த மாநிலத்தைதான்.. கோடிக்கணக்கில் முதலீடு குவிகிறது
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக, குஜராத் மாநிலத்தில் ரூ.2,000 கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக, குஜராத் மாநிலத்தில் ரூ.2,000 கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சில நிறுவனங்களும், குஜராத்தில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை, வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகை, சுற்றுச்சூழலை வெகுவாக மாசுபடுத்தி கொண்டுள்ளது. இந்த 2 பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வாக இருப்பது எலக்ட்ரிக் வாகனங்கள்.

பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை காட்டிலும், பல மடங்கு குறைவான செலவில், எலக்ட்ரிக் வாகனங்களில் பயணிக்க முடியும். அத்துடன் எலக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தாது. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில், எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

வாடிக்கையாளர்களின் மன ஓட்டத்தை, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நன்றாக புரிந்து கொண்டுவிட்டன. எனவே முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொன்றும், போட்டி போட்டு கொண்டு, எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து, மார்க்கெட்டில் களமிறக்கி வருகின்றன.

இந்நிலையில், எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்கள் பலவும், குஜராத் மாநிலத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாகிகள் சிலர், குஜராத் மாநில உயரதிகாரிகளை சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சனந்த்தில், எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய, ரூ.1,600 முதல் ரூ.2,000 கோடி வரை முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாகதான் குஜராத் மாநில உயரதிகாரிகளை, டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது தங்களின் திட்டம் தொடர்பான அறிக்கையையும் அவர்கள் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, சனந்தில் ஏற்கனவே பிளாண்ட் உள்ளது. அதனை டாடா மோட்டார்ஸ் விரிவாக்கம் செய்யப்போகிறதா? அல்லது புதிய யூனிட்டை அமைக்கப்போகிறதா? என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.

டாடா மோட்டார்ஸ் தவிர, மேலும் சில முன்னணி நிறுவனங்களும், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக, குஜராத் மாநிலத்தில் பெரிய அளவிலான முதலீடுகளை செய்ய ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் மாநிலத்தில், எலக்ட்ரிக் கார் பிளாண்ட் அமைப்பது தொடர்பான தனது திட்டத்தை, ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி (JSW Energy) நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதுதவிர ஜப்பான் மற்றும் சீனாவை சேர்ந்த சில நிறுவனங்களும், குஜராத் அரசிடம் தங்களின் ஆர்வத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிக அளவிலான ஆட்டோமொபைல் நிறுவனங்களை கொண்ட மாநிலங்களில், தமிழ்நாடு முதன்மையானதாக திகழ்ந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக தமிழகத்தில் முதலீடுகள் குறைந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.

சமீபத்தில் தென் கொரியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான கியா மோட்டார்ஸ், தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டது. ஆனால் ஆட்சியாளர்கள் அதிகப்படியான லஞ்சம் கேட்டதால், கியா மோட்டார்ஸ் தனது முடிவை மாற்றி கொண்டு, ஆந்திரா சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை தற்போது வரை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








