கார்ப்ரேட்களுக்கு மட்டும் சலுகை? பணிந்தது மோடி அரசு.. எலக்ட்ரிக் கார்களுக்கு 1.4 லட்சம் மானியம்..
தனி நபர்கள் வாங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியத்தை ரத்து செய்து விட்டு, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சாதகமான முடிவை எடுப்பது என்ற நிலையில் இருந்து மத்திய அரசு பின் வாங்கியுள்ளது.
தனி நபர்கள் வாங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியத்தை ரத்து செய்து விட்டு, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சாதகமான முடிவை எடுப்பது என்ற நிலையில் இருந்து மத்திய அரசு பின் வாங்கியுள்ளது. எனவே எலக்ட்ரிக் கார் வாங்குபவர்களுக்கு, 1.4 லட்ச ரூபாய் மானியம் கிடைப்பதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அத்துடன் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பேராபத்தை விளைவித்து வருகின்றன. இந்த 2 பிரச்னைகளுக்கு ஒரே தீர்வாக முன் வைக்கப்படுவது எலக்ட்ரிக் வாகனங்கள்தான்.

எனவே 2030ம் ஆண்டுக்குள், இந்தியாவில் இயங்கும் அனைத்து வாகனங்களும், எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இதனால் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோரை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இதற்காக ஃபேம் (FAME-Faster Adoption and Manufacturing of Hybrid and Electric vehicles in India) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. முதல் கட்ட ஃபேம் (FAME PHASE I) திட்டத்திற்கு, 700 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

எலக்ட்ரிக் கார், டூவீலர் என எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு இந்த நிதியில் இருந்து, குறிப்பிட்ட அளவிலான தொகை மானியமாக வழங்கப்பட்டு வந்தது. எனினும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் தனி நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக மத்திய அரசு கருதியது.

எனவே மானியம் அளித்தாலும், எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சொல்லிக்கொள்ளும்படி அதிகரிக்கவில்லை என கூறப்பட்டது. இதனால் 2ம் கட்ட ஃபேம் திட்டத்தில் (FAME PHASE II), தனி நபர்கள் வாங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியானது.

இதற்கு பதிலாக பொது பயன்பாட்டுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் ஓலா, உபேர் போன்ற கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு மானிய தொகையை அதிகரித்து வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வந்தன.

ஏனெனில் மானியம் கிடைப்பதன் மூலமாக, ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள், தங்களின் அனைத்து வாகனங்களையும், எலக்ட்ரிக் மயமாக மாற்ற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இதன்மூலம் எரிபொருள் தேவை குறைவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என ஒரு சாரார் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் தனி நபர்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டால், சாதாரண பொது மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். ஏனெனில் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த சூழலில் மானியம் கிடைக்காவிட்டால், பொதுமக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் ஆர்வம் நிச்சயமாக குறையும். எனவே மத்திய அரசின் முடிவிற்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் மிக கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது.

2ம் கட்ட ஃபேம் திட்டம் தற்போது வரைவு நிலையில் உள்ளது. அதனை விரைவில் அமல்படுத்துவதற்கான உயர்மட்ட ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், எவ்வாறான முடிவு எடுக்கப்படும்? என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த சூழலில், 2ம் கட்ட ஃபேம் திட்டத்திற்கு ரூ.5,500 கோடியை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தனி நபர்கள் வாங்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு, மானியத்தை ரத்து செய்வது என்ற நிலையில் இருந்து, மத்திய அரசு பின் வாங்கியுள்ளதாகவும் உறுதியான தகவல் கூறுகிறது.

தற்போது இந்தியாவில் மஹிந்திரா மற்றும் டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை செய்து வரும் எலக்ட்ரிக் கார் மாடல்களை வாங்குபவர்கள், 1.4 லட்ச ரூபாய் மானிய தொகை கிடைக்கும் என உறுதியாக நம்பலாம். இது தொடர்பான இறுதி முடிவை, மத்திய அமைச்சரவை விரைவில் எடுக்கவுள்ளது.

பேட்டரியின் அளவுடன், மானிய தொகை இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு கிலோவாட் ஹவருக்கும் (kilowatt hour-KwH), 10 ஆயிரம் ரூபாய் மானியமாக கிடைக்கும். அதாவது தற்போது விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் கார்கள் 14 KwH பேட்டரி திறனுடன் வருகின்றன.

அப்படியானால் ஒவ்வொரு KwH-க்கும் 10 ஆயிரம் வீதம், 14 KwHக்கு 1.4 லட்சம் மானியமாக வழங்கப்படும். இந்த வகையில் பார்த்தால், எலக்ட்ரிக் டூவீலர்கள் 2 KwH பேட்டரி திறனுடன் வருகின்றன. எனவே எலக்ட்ரிக் டூவீலர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் எலக்ட்ரிக் 3 வீலர்கள் (மூன்று சக்கர வாகனங்கள்), 4 முதல் 4.5 வரையிலான பேட்டரி திறனுடன் வருகின்றன. எனவே எலக்ட்ரிக் 3 வீலர்களுக்கு 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை மானியம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








