உயர்வகை மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியது மஹிந்திரா!!
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராண்டில் முதலாவதாக மின்சார ஹைப்பர் கார் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும்.
உயர்வகை மின்சார கார் தயாரிப்புக்கான புதிய நிறுவனத்தை துவங்குவதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய நிறுவனத்தின் கீழ், முதலாவதாக மின்சார ஹைப்பர் கார் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஃபெராரி, பிஎம்டபிள்யூ என உலகின் முன்னணி கார் நிறுவனங்களுக்கு கார்களை டிசைன் செய்து கொடுத்து புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனத்தை கடந்த 2016ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியது.

இந்த நிலையில், ஃபார்முலா-இ மின்சார கார் பந்தயத்தில் பங்கு பெற்று வரும் மஹிந்திரா நிறுவனத்திற்கு மின்சார ரேஸ் கார்களை தயாரிப்பு தொழில்நுட்பத்தில் நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. மின்சார ரேஸ் கார் தயாரிப்பில் கிடைத்த அனுபவத்தையும், பினின்ஃபரீனா நிறுவனத்தின் கார் டிசைன் வல்லமையையும் பயன்படுத்ததி உயர் வகை மின்சார கார்களை தயாரிக்க மஹிந்திரா முடிவு செய்துள்ளது.

இதற்காக, 'ஆட்டோமொபைல் பினின்ஃபரீனா' என்ற புதிய உயர்வகை மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தை துவங்குவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய நிறுவனம் முதலாவதாக மின்சார ஹைப்பர் கார் மாடலை தயாரிக்க இருக்கிறது. வரும் 2020ம் ஆண்டு இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஆட்டோமொபைல் பினின்ஃபரீனா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஹைப்பர் கார் கிரான் லூஸோ அல்லது கிரான்ட் லக்சுரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மின்சார ஹைப்பர் கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2 வினாடிகளிலும், 0 - 300 கிமீ வேகத்தை 12 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை மிக்கதாக இருக்கும்.

அதாவது, உலகின் அதிவேக தயாரிப்பு நிலை மாடலாக கருதப்படும் புகாட்டி வேரான் மற்றும் சிரோன் கார்களை விட அதிக செயல்திறன் மிக்கதாக இந்த மின்சார கார் இருக்கும். அதிகபட்சமாக 400 கிமீ வேகம் வரை தொடும் திறனை பெற்றிருக்கும்.

இந்த காரில் கொடுக்கப்பட இருக்கும் அதிதிறன் வாய்ந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். பினின்ஃபரீனா பிராண்டில் இந்த புதிய மின்சார ஹைப்பர் கார் வர இருக்கிறது.

பினின்ஃபரீனா மின்சார ஹைப்பர் கார் மாடல் 2 மில்லியன் யூரோ விலை கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 100 கார்கள் மட்டுமே விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.

ஆடி இந்தியா கார் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்த மைக்கேல் பெர்ஷகேதான் மஹிந்திரா நிறுவனத்தின் இந்த புதிய மின்சார சொகுசு கார் நிறுவனத்திற்கு சிஇஓ.,வாக செயல்பட இருக்கிறார். இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். அதேபோன்று, வால்வோ நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிய பெர் ஸ்வான்டெசன் சிஓஓ.,வாக பணி ஏற்க உள்ளார்.


Click it and Unblock the Notifications








