மஹிந்திரா ராக்ஸர் ஆஃப்ரோடு எஸ்யூவி அமெரிக்காவில் அறிமுகம்!
அமெரிக்காவில் புதிய ஆஃப்ரோடு எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த எஸ்யூவிக்கான உதிரிபாகங்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
அமெரிக்காவில் புதிய ஆஃப்ரோடு எஸ்யூவி மாடலை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எஸ்யூவியின் படங்கள், விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

வட அமெரிக்க கார் மார்க்கெட்டில் கால் பதிக்கும் முயற்சிகளில் இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஆண்டு மஹிந்திராவின் அமெரிக்க நிறுவனம் [MANA]துவங்கப்பட்டது. அப்போதே, ராக்ஸர் என்ற ஆஃப்ரோடு எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் புத்தம் புதிய ராக்ஸர் ஆஃப்ரோடு எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் பார்வைக்கு கொண்டு வந்தது. மஹிந்திரா தார் அடிப்படையில் அமெரிக்க மார்க்கெட்டுக்கான சிறப்பம்சங்களுடன் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு உண்மையான ஆஃப்ரோடு எஸ்யூவி மாடலாகவும் இதனை வடிவமைத்துள்ளனர். இதன் வடிவமைப்பு மற்றும் சட்ட விதிகளின்படி, சாதாரண சாலைகளில் பயன்படுத்த முடியாது.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மஹிந்திரா தார் எஸ்யூவியின் அடிப்படையில்தான் இந்த புதிய ஆஃப்ரோடு எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. தார் எஸ்யூவியின் அடிப்படை அம்சங்களை பெற்றிருந்தாலும், முன்புறத்தில் பல வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த எஸ்யூவியில் பிளாஸ்டிக் பாகங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, வலிமையான ஸ்டீல் பாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. கதவுகள் மற்றும் ஹார்டு டாப் கூரை இல்லை.

இன்டீரியரில் கூட பல மாற்றங்கள் உள்ளன. அமெரிக்காவிற்காக இடது பக்க ஸ்டீயரிங் வீல் அமைப்பை பெற்றிருக்கிறது. மஹிந்திரா தாரில் பிளாஸ்டிங் டேஷ்போர்டு இருக்கும் நிலையில், இந்த எஸ்யூவியில் ஸ்டீல் டேஷ்போர்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சிங்கிள் கேஜ் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கப் ஹோல்டர்களுடன் கூடிய சென்டர் கன்சோல் ஆகியவையும் குறிப்பிடத்தக்க விஷயங்கள். இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த எஸ்யூவியில் துணையாக வரும் பயணிக்கு விசேஷ கைப்பிடியும் உள்ளது.

புதிய மஹிந்திரா ராக்ஸர் எஸ்யூவியில் 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 62 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருப்பதுடன், 4 வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது.

இந்த எஸ்யூவியில் ஏராளமான ஆஃப்ரோடு ஆக்சஸெரீகள் இடம்பெற்று இருக்கின்றன. ஆஃப்ரோடு டயர்கள், ஹெவி ட்யூட்டி வின்ச், ரோல் பார் என இந்த பட்டியல் நீள்கிறது. இந்த எஸ்யூவியை வாடிக்கையாளர் விருப்பம்போல் கூடுதல் ஆக்சஸெரீகளை பொருத்திக் கொள்ளவும், கஸ்டமைஸ் செய்து கொள்ளவும் ஏராளமான வாய்ப்புகளை மஹிந்திரா வழங்குகிறது.

இந்த எஸ்யூவிக்கு 900 விதமான வண்ணங்கள் மற்றும் ஸ்டிக்கர் அலங்காரங்களை வழங்குவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. உண்மையான ஆஃப்ரோடு எஸ்யூவியை விரும்புபவர்களை மட்டுமே குறிவைத்து இந்த எஸ்யூவியை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகவே நேற்று இந்த எஸ்யூவியை பொதுத் தளத்திற்கு கொண்டு வந்துள்ளது.

புதிய மஹிந்திரா ராக்ஸர் எஸ்யூவிக்கான உதிரிபாகங்கள் இந்தியாவிலிருந்துதான் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன. அமெரிக்காவின் டெட்ராய்ட் அருகே இருக்கும் ஆபர்ன் ஹில்ஸ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் மஹிந்திராவின் புதிய கார் ஒருங்கிணைப்பு ஆலையில் உதிரிபாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கிறது.

மஹிந்திராவின் பவர்ஸ்போர்ட் என்ற டீலர்ஷிப்புகள் வழியாக அமெரிக்காவில் புதிய மஹிந்திரா ராக்ஸர் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவில் 15,000 டாலர் விலையில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் விலையில் அங்கு விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

அமெரிக்கா தவிர்த்து, அங்கிருந்து அருகிலுள்ள நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மஹிந்திரா தார் எஸ்யூவி இருப்பதால், இந்த எஸ்யூவி வருவது சந்தேகமாக இருக்கிறது. இதுகுறித்து தற்போது தகவல் எதுவும் இல்லை.


Click it and Unblock the Notifications








