சீனாவின் திடீர் முடிவால் இந்தியாவில் கார்கள் விலை கிடுகிடு உயர்வு.. பின்னணியில் நடப்பது இதுதான்..
ஹோண்டா, ஹூண்டாய் நிறுவனங்களை தொடர்ந்து, மஹிந்திரா நிறுவன கார்களின் விலையும், நாளை மறுநாள் முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா, ஹூண்டாய் நிறுவனங்களை தொடர்ந்து, மஹிந்திரா நிறுவன கார்களின் விலையும், நாளை மறுநாள் முதல் உயர்த்தப்படும் என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. கார்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருவதற்கான விரிவான பின்னணி காரணங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று மஹிந்திரா. கார், டூவீலர் உற்பத்தியில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கும் கார்களின் விலை, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி (நாளை மறுநாள்) முதல் உயரும் என இன்று (ஜூலை 30ம் தேதி) அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.30 ஆயிரம் வரை அல்லது 2 சதவீதம் என்ற அடிப்படையில், கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக, மஹிந்திரா திடீரென அறிவித்துள்ளது. இதனால் ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி 500 (XUV500), டியூவி 300 (TUV300) உள்பட மஹிந்திரா நிறுவனத்தின் சில முன்னணி மாடல் கார்களின் விலை உயரவுள்ளது.

மஹிந்திரா மற்றும் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் செக்டார் தலைவர் ராஜன் வதேரா, இந்த செய்தியை உறுதி செய்துள்ளார். மஹிந்திரா மட்டுமல்ல. மேலும் சில முன்னணி நிறுவனங்களும், தங்கள் கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

இந்தியாவில் சமீப காலமாகவே, கார்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. மஹிந்திராவிற்கு முன்னதாக, ஹோண்டா மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள், கார்களின் விலையை 2-4 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்திருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஹோண்டா நிறுவனம் மாடல்களை பொறுத்து, குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரை கார்களின் விலை உயர்த்தப்படும் என இந்த மாத தொடக்கத்திலேயே அறிவித்தது. ஹோண்டா கார்களின் விலை உயர்வும் நாளை மறு நாள் முதல் (ஆகஸ்ட் 1) அமலுக்கு வரவுள்ளது.

இதனை தொடர்ந்து தென் கொரியாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், தங்களது கிராண்ட் ஐ10 காரின் விலையை 3 சதவீதம் உயர்த்த உள்ளதாக அறிவித்தது. இந்த விலை உயர்வும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா எஸ்யூவி காரை தவிர, சில கார்களின் விலையை ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜூன் மாதமே உயர்த்தி விட்டது. இந்த வரிசையில் விரைவில் டொயோட்டா நிறுவனமும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் அடுத்த மாதம் முதல், கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக, டொயோட்டா சூசகமாக அறிவித்துள்ளது. எனவே டொயோட்டா கார்களின் விலையும் விரைவில் உயரலாம். முன்னணி நிறுவனங்கள் கார்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதற்கான பின்னணி காரணங்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாக ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு கிடைக்கும் மொத்த வருவாயில் 60-74 சதவீத தொகையானது, கார்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களை வாங்குவதற்கே சரியாக சென்று விடும்.

இரும்பு, காப்பர், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவைதான் கார்களை உற்பத்தி செய்வதற்கான குறிப்பிடத்தகுந்த மூலப்பொருட்கள். இதில், மிக முக்கியமான மூலப்பொருள் இரும்பு. மூலப்பொருட்களுக்கு என ஒதுக்கப்படும் மொத்த தொகையில், 50-60 சதவீதம் இரும்பிற்கே தேவைப்படும்.

இந்த சூழலில், காரை உற்பத்தி செய்வதற்கான முக்கிய மூலப்பொருளாக திகழும் இரும்பின் விலை கடந்த 3 முதல் 6 மாத காலமாக தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. முன்பு இருந்ததை காட்டிலும், சுமார் 10 சதவீதம் வரை இரும்பின் விலை உயர்ந்து விட்டது.

எனவே கார்களுக்கான உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் போக்குவரத்து செலவுகளும் உயர்ந்து வருவதால், கார்களின் விலையை உயர்த்தியே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இரும்பு உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளில் ஒன்று சீனா. ஆனால் கனிம வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களை முன்னிட்டு சீனாவில் இரும்பு உற்பத்தி பெருமளவில் குறைக்கப்பட்டு விட்டது. இதனால் சர்வதேச சந்தையில் இரும்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவில் இரும்பு உற்பத்தியாகாமல் இல்லை. இந்தியாவிலும் இரும்பு உற்பத்தி சிறப்பாக நடைபெற்று கொண்டுதான் உள்ளது. ஆனால் இந்திய இரும்பின் தரம் சிறப்பாக உள்ளதால், ஒரு பக்கம் ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது. எனவேதான் இரும்பிற்கான தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








